கோவையில் இருந்து மணிப்பூர் மாநிலத்திற்கு 180 பேர் பஸ்சில் புறப்பட்டனர்


கோவையில் இருந்து   மணிப்பூர் மாநிலத்திற்கு 180 பேர் பஸ்சில் புறப்பட்டனர்
x
தினத்தந்தி 21 May 2020 12:07 AM GMT (Updated: 21 May 2020 12:07 AM GMT)

கோவையில் இருந்த மணிப்பூர் மாநிலத்தை சேர்ந்த 180 பேரை சென்னைக்கு பஸ்சில் அழைத்து சென்று அங்கிருந்து மணிப்பூர் மாநிலத்திற்கு சிறப்பு ரெயிலில் அனுப்ப முடிவு செய்யப்பட்டது.

கோவை,

கோவையில் மணிப்பூர், அசாம் உள்ளிட்ட வட கிழக்கு மாநிலங்களை சேர்ந்தவர்கள் பணிபுரிந்து வருகின்றனர். மேலும் கோவையில் உள்ள கல்லூரிகளில் அந்த மாநிலங்களை சேர்ந்த பலர் படித்து வருகின்றனர். இதையடுத்து கோவையில் வசித்து வந்த மணிப்பூர் மாநிலத்தவர்களை சென்னைக்கு பஸ்சில் அழைத்து செல்லப்பட்டு அங்கிருந்து மணிப்பூர் மாநிலத்திற்கு சிறப்பு ரெயிலில் அனுப்ப முடிவு செய்யப்பட்டது. இதன்படி மணிப்பூர் மாநிலத்தை சேர்ந்த 180 பேர் பஸ்கள் மூலம் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

கருமத்தம்பட்டி அருகே சோமனூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த தொழிலாளர்கள் சுமார் 75 பேர் தங்களுடைய சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என சோமனூரில் உள்ள கருமத்தம்பட்டி வருவாய் ஆய்வாளர் அலுவலகம் முன்பு திரண்டு கோரிக்கை வைத்தனர். இதையடுத்து கருமத்தம்பட்டி வருவாய் ஆய்வாளர் முத்து மாணிக்கம், தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி இன்னும் ஒரு சில நாட்களில் சொந்த மாநிலங்களுக்கு ரெயில் மூலம் அனுப்பி வைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். அதன்பேரில் தொழிலாளர்கள் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Next Story