திருப்பூர் காந்திநகரில் செயல்பட்டு வரும் வருங்கால வைப்புநிதி அலுவலகம் விரைவில் இடம் மாறுகிறது கட்டுமான பணிகள் தீவிரம்


திருப்பூர் காந்திநகரில் செயல்பட்டு வரும்   வருங்கால வைப்புநிதி அலுவலகம் விரைவில் இடம் மாறுகிறது   கட்டுமான பணிகள் தீவிரம்
x
தினத்தந்தி 22 May 2020 12:07 AM GMT (Updated: 22 May 2020 12:07 AM GMT)

திருப்பூர் காந்திநகரில் செயல்பட்டு வரும் வருங்கால வைப்புநிதி அலுவலகம் விரைவில் இடம் மாறுகிறது. இதற்கான கட்டுமான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

திருப்பூர், 

திருப்பூர் மாவட்டத்தில் திருப்பூர், அவினாசி, பல்லடம், வெள்ளகோவில் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்களுக்காக திருப்பூர் மாவட்ட வருங்கால வைப்புநிதி அலுவலகம் திருப்பூர் அவினாசி ரோடு, காந்தி நகரில் வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது. தொடக்கத்தில் கோவை மண்டலத்துக்கு உட்பட்ட ஓர் ஆய்வாளர் அலுவலகமாகவே செயல்பட்டு வந்தது. கடந்த 2017-ம் ஆண்டு திருப்பூர் மாவட்ட வருங்கால வைப்புநிதி அந்தஸ்து பெற்றது. இதற்கென கமிஷனரும் நியமிக்கப்பட்டார்.

மாவட்ட அலுவலகமாக தரம் உயர்த்தப்பட்ட நிலையில், தற்போது உள்ள கட்டிடம் இடவசதி போதுமானதாக இல்லை. இதனைத்தொடர்ந்து பல்லடம் ரோட்டில் உள்ள புதிய கலெக்டர் அலுவலகத்துக்கு எதிர்புறம் தனியாருக்கு சொந்தமான கட்டிடம் வாடகைக்கு பெறப்பட்டுள்ளது.

விரைவில் இட மாற்றம்

தற்போது இந்த கட்டிடத்தில் அலுவலக உட்கட்டமைப்பு கட்டுமான பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. அதன்படி டைல்ஸ் கற்கள் பதித்தல், பெயிண்டிங் உள்ளிட்ட பணிகள் நடந்து வருகின்றன. வருகிற ஜூன் மாதம் 1-ந் தேதி முதல் இந்த புதிய இடத்திற்கு மாவட்ட வருங்கால வைப்புநிதி அலுவலகம் இடம் மாற்றம் செய்ய முடிவு செய்துள்ளனர். கமிஷனர் அறை, ஆய்வாளர்கள், அமலாக்கம், ஆவண காப்பக அறைகள் போன்றவைகளுடன் புதிய வருங்கால வைப்புநிதி அலுவலகம் விரைவில் செயல்பட உள்ளது.

இது குறித்து திருப்பூர் மண்டல வருங்கால வைப்புநிதி ஆணையர் விஜய் ஆனந்த் கூறியதாவது:-

வருங்கால வைப்புநிதி அலுவலகம் ஜூன் 1-ந் தேதி முதல் திருப்பூர் புதிய கலெக்டர் அலுவலகத்திற்கு எதிரே செயல்பட உள்ளது. இதற்கான பணிகள் அனைத்தும் நடைபெற்று வந்து கொண்டிருக்கிறது. கடந்த காலங்களில் வருங்கால வைப்புநிதி அலுவலகத்திற்கு தொழிலாளர்கள் வருவதற்கு பல்வேறு சிரமங்கள் இருந்து வந்தது. தற்போது இந்த இடமாற்றத்தின் மூலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வருகிற பலரும் எளிதாக வருங்கால வைப்புநிதி அலுவலகத்திற்கு வந்து செல்ல முடியும். திருப்பூர் மாவட்டத்தில் மொத்தம் 2 லட்சத்து 30 ஆயிரம் தொழிலாளர்கள் வருங்கால வைப்புநிதி அலுவலகத்தில் பதிவு செய்துள்ளனர். இதுபோல் 3 ஆயிரத்து 500 நிறுவனங்களும் பதிவு செய்துள்ளன. பொதுமக்கள் எந்த குறை இருந்தாலும், வருங்கால வைப்புநிதி அலுவலகத்தை அணுகினால், உடனே நிவர்த்தி செய்துதரப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story