கொரோனாவுக்கு எதிராக எதிர்ப்பு சக்தியை உண்டாக்க பொது மக்களுக்கு ஓமியோபதி வைட்டமின் மாத்திரைகள் - அமைச்சர் ஜெயக்குமார் வழங்கினார்


கொரோனாவுக்கு எதிராக எதிர்ப்பு சக்தியை உண்டாக்க பொது மக்களுக்கு ஓமியோபதி வைட்டமின் மாத்திரைகள் - அமைச்சர் ஜெயக்குமார் வழங்கினார்
x
தினத்தந்தி 22 May 2020 11:45 PM GMT (Updated: 22 May 2020 9:47 PM GMT)

சென்னை ராயபுரத்தில் கொரோனாவுக்கு எதிராக எதிர்ப்பு சக்தியை உண்டாக்க பொதுமக்களுக்கு ஓமியோபதி வைட்டமின் மாத்திரைகளை அமைச்சர் ஜெயக்குமார் வழங்கினார்.

திருவொற்றியூர், 

சென்னை ராயபுரத்தில் உள்ள ராபின்சன் மைதானத்தில் கொரோனாவுக்கு எதிராக எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் ஓமியோபதி வைட்டமின் மாத்திரைகளை பொதுமக்களுக்கு அமைச்சர் ஜெயக்குமார் வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

உலகம் முழுவதும் உள்ள மருத்துவ குழுவினர் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கொரோனாவுக்கு நிரந்தர தீர்வாக மருந்து கண்டுபிடிக்க வேண்டும். சித்தா மற்றும் ஓமியோபதி முறையில் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பல்வேறு மருந்துகள் கண்டுபிடிக்கபட்டுள்ளன. தற்போது ஓமியோபதி முறையில் ஆர்சனிக் ஆல்பம் 30 சி என்ற மாத்திரை கொரோனாவுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தியை உடலில் உருவாக்குகிறது. இதனை பயன்படுத்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

தற்போது பொதுமக்களுக்கு இந்த ஆர்சனிக் ஆல்பம் 30 சி மாத்திரை வழங்கப்பட்டு வருகிறது. சென்னையில் ராயபுரம் மண்டலத்தில் அதிகளவில் கொரோனா தொற்று இருப்பதால், இங்கு முதன் முதலாக இந்த பணியை தொடங்குகிறோம். தமிழகம் முழுவதும் 20 லட்சம் மாத்திரைகள் வழங்கப்படுகின்றன.

தமிழக மக்கள் மற்றும் அ.தி.மு.க. தொண்டர்களின் எதிர்பார்ப்பாக ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லம் நினைவு சின்னமாக மாற்ற அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மீனவ நலவாரியம் சார்பில் 4 லட்சத்து 91 ஆயிரம் பேருக்கு ஏற்கனவே ரூ.1000 கொடுக்கப்பட்டுள்ள நிலையில், 2-ம் கட்டமாக மேலும் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. மீனவர் குடும்பம் என கணக்கெடுக்காமல் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் தனித்தனியாக கணக்கெடுக்கப்பட்டு நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது என்றார்.

இதுகுறித்து ஓமியோபதி மருத்துவ கவுன்சில் தலைவர் டாக்டர் ஞானசம்பந்தம் கூறியதாவது:-

மத்திய அமைச்சகம் ஆயூஷ் பரிந்துரை செய்துள்ள மருந்து இது. எந்த மாத்திரைகள் எடுத்துக்கொண்டாலும் இந்த மாத்திரையை உட்கொள்ளலாம். எல்லா வயதினருக்கும் ஏற்றது. தினசரி 4 மாத்திரைகளை வெறும் வயிற்றில் எடுத்து கொள்ள வேண்டும். இது நோய் தடுப்பு மருந்துதான்.

அனைத்து மண்டலங்களிலும் விரைவாக நோய் எதிர்ப்பு மாத்திரைகள் வினியோகம் செய்யப்படும். தற்போது ஒரு மாதத்திற்கு தேவையான மருந்துகள் கொடுக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.

Next Story