குடிமராமத்து பணிகள் மேற்கொள்ளப்படும் ஏரி, குளம், குட்டைகளில் ஆக்கிரமிப்பை அகற்றி தூர்வார வேண்டும் - கலெக்டர் உத்தரவு


குடிமராமத்து பணிகள் மேற்கொள்ளப்படும் ஏரி, குளம், குட்டைகளில் ஆக்கிரமிப்பை அகற்றி தூர்வார வேண்டும் - கலெக்டர் உத்தரவு
x
தினத்தந்தி 24 May 2020 11:15 PM GMT (Updated: 24 May 2020 9:08 PM GMT)

வேலூர் மாவட்டத்தில் குடிமராமத்து பணிகள் மேற்கொள்ளப்படும் ஏரி, குளம், குட்டைகளில் ஆக்கிரமிப்பை அகற்றி தூர்வார வேண்டும் என்று ஆய்வுக்கூட்டத்தில் அதிகாரிகளுக்கு, கலெக்டர் சண்முகசுந்தரம் உத்தரவிட்டார்.

வேலூர், 

வேலூர் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை, ஊரக வளர்ச்சித்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஏரி, குளம், குட்டைகளில் குடிமராமத்து பணிகளை விரைந்து முடிப்பதற்கான ஆய்வுக்கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மாலதி, ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளர் மலர்விழி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்துக்கு கலெக்டர் சண்முகசுந்தரம் தலைமை தாங்கி பேசியதாவது:-

வேலூர் மாவட்டத்தில் நீர்வள ஆதாரம் பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 14 ஏரிகள் இந்தாண்டு குடிமராமத்து திட்டத்தின் கீழ் தூர்வாரப்பட உள்ளன. இதன் மூலம் 1,272 ஹெக்டர் நிலங்கள் பாசனம் பெறும். இதேபோன்று ஊரக வளர்ச்சி துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 157 குளம், குட்டைகளில் தூர்வாரும் பணிகள் நடைபெற உள்ளது. ஏரிகளில் குடிமராமத்து பணிகளை மேற்கொள்வதற்கு முன்னதாக நீர்பாசன ஆயக்கட்டுதாரர்களை கண்டறிந்து ஏரி நீர்ப்பாசன சங்கத்தை உருவாக்க வேண்டும்.

ஆயக்கட்டுதாரர்களின் முழு பங்கும் இப்பணிகளில் இருப்பதை உறுதி செய்து அவர்களின் பங்களிப்புடன் பணிகள் மேற்கொள்ள வேண்டும். நீர்வரத்து கால்வாய்களை முதலில் அளவீடு செய்து அவற்றை சீரமைக்க வேண்டும். ஏரிகளின் கட்டமைப்புகளை சீரமைத்தல், கால்வாய்களை சீரமைத்தல் போன்ற பணிகளை மேற்கொள்ளும் முன்பு அதனை ஆய்வு செய்திட வேண்டும். ஆக்கிரமிப்புகள் இருந்தால் உடனடியாக அகற்றி தூர்வாரும் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

ஏரி, குளம், குட்டைகளை தூர்வாரி கரைகளை பலப்படுத்த வேண்டும். இப்பணியில் தாசில்தார்கள், பொதுப்பணித்துறையினர், ஊரக வளர்ச்சி துறையினருடன் இணைந்து செயல்பட வேண்டும். பணிகளை விரைந்து முடிந்து அதற்கான அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில், தாசில்தார்கள், நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர்கள், உதவி பொறியாளர்கள், தாசில்தார்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story