சென்னையில் இருந்து கிருஷ்ணகிரிக்கு வந்த இளம்பெண் உள்பட 2 பேருக்கு கொரோனா


சென்னையில் இருந்து கிருஷ்ணகிரிக்கு வந்த இளம்பெண் உள்பட 2 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 25 May 2020 12:24 AM GMT (Updated: 25 May 2020 12:24 AM GMT)

சென்னையில் இருந்து கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு வந்த இளம்பெண் உள்பட 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த 18 பேர் மற்றும் மராட்டிய மாநிலத்தில் இருந்து மத்திகிரிக்கு வந்த 2 பேர் என 20 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு ஓசூர் இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பினார்கள்.

இதைத் தவிர கடந்த சில நாட்களுக்கு முன்பு மராட்டிய மாநிலத்தில் இருந்து தூத்துக்குடிக்கு லாரியில் சென்ற தொழிலாளியை கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே பரிசோதனை செய்த போது அவருக்கு கொரோனா இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து அவருக்கு கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் ஓசூர் அலசநத்தம் பகுதியை சேர்ந்த கார் டிரைவர் ஒருவருக்கு கொரோனா இருப்பது தெரியவந்தது. அவரும் கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதையடுத்து மாவட்ட நிர்வாகம் சார்பில் சுகாதாரத்துறை அதிகாரிகள் வெளிமாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து வருபவர்களை தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

இந்த நிலையில், வெளிமாநிலம் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு ஊர் திரும்பியவர்களின் ரத்தம் மற்றும் சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு கொரோனா பரிசோதனைக்காக ஓசூர் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

அதில் ஊத்தங்கரை தாலுகா வண்ணம்பள்ளி கிராமத்தை சேர்ந்த பேக்கரி கடை தொழிலாளியான 18 வயது இளைஞர் ஒருவருக்கும், வேப்பனப்பள்ளி ஒன்றியம் பந்தாரப்பள்ளியை சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒருவருக்கும் கொரோனா தொற்று இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவர்கள் 2 பேரும் சென்னையில் இருந்து கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு திரும்பியவர்கள் ஆவார்கள். இதைத் தொடர்ந்து 2 பேரும் சிகிச்சைக்காக, கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனா தொற்றால் இதுவரையில் 24 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 20 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 4 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்று கூறினார்கள்.

Next Story