பள்ளி, போக்குவரத்துக்கு இடையூறாக பால் கூட்டுறவு சங்க கட்டிடம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்


பள்ளி, போக்குவரத்துக்கு இடையூறாக பால் கூட்டுறவு சங்க கட்டிடம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 27 May 2020 11:15 PM GMT (Updated: 27 May 2020 6:53 PM GMT)

பள்ளி, போக்குவரத்துக்கு இடையூறாக பால் கூட்டுறவு சங்க கட்டிடம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கண்ணமங்கலம்,

கண்ணமங்கலம் அருகே உள்ள அம்மாபாளையம் கிராமத்தில் நடுநிலைப்பள்ளி சத்துணவு மையம் அருகே ரூ.13 லட்சத்து 57 ஆயிரம் மதிப்பில் புதிதாக பால் கூட்டுறவு சங்கக் கட்டிடம் கட்டுவதற்காக ஊராட்சி தலைவர் வெங்கடேசன் நேற்று முன்தினம் பொக்லைன் எந்திரம் மூலம் பள்ளியின் சுற்றுச் சுவரை இடித்து விட்டார்.

இதற்கு ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சித்தார்த்தன் மற்றும் கிராம பொதுமக்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். அப்போது துணைத் தலைவர் சித்தார்த்தனை, வெங்கடேசனின் ஆதரவாளர்கள் தாக்கினர். அதில் காயமடைந்த சித்தார்த்தன் ஆரணி அரசு மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

அதைத்தொடர்ந்து நேற்று காலை சித்தார்த்தன் தலைமையில் பள்ளி அருகே மாணவ-மாணவிகளுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக பால் கூட்டுறவு சங்கத்துக்கு புதிய கட்டிடம் கட்டக்கூடாது என எதிர்ப்புத் தெரிவித்து பொதுமக்கள் திடீர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அப்போது துணைத் தலைவர் சித்தார்த்தன் மற்றும் பொதுமக்கள் கூறுகையில், பள்ளிக்கும், அதன் அருகில் உள்ள சாலைப் போக்குவரத்துக்கும் இடையூறாக பால் கூட்டுறவு சங்க கட்டிடம் கட்டக்கூடாது. பள்ளி அருகே உள்ள பழமையான ஆலமரத்தை ஏற்கனவே வெட்ட முயன்று வருகின்றனர். திரவுபதியம்மன் அக்னி வசந்த விழா நடக்கும்போது இந்த இடத்தில் தான் துரியோதனன் படுகளம் நடக்கும். துணைத் தலைவர் சித்தார்த்தனை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கண்ணமங்கலம் போலீசில் புகார் செய்துள்ளோம், என்றனர்.

இதுகுறித்து இருதரப்பினரும் கண்ணமங்கலம் போலீசில் புகார் செய்துள்ளனர். விரைவில் இரு தரப்பினருக்கும் ஆரணி தாசில்தார் தலைமையில் சமரசக் கூட்டம் நடத்த உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

Next Story