பூந்தமல்லி அருகே பழைய பொருட்கள் குடோனில் தீ விபத்து


பூந்தமல்லி அருகே பழைய பொருட்கள் குடோனில் தீ விபத்து
x
தினத்தந்தி 27 May 2020 11:15 PM GMT (Updated: 27 May 2020 9:12 PM GMT)

பூந்தமல்லி அருகே பழைய பொருட்கள் குடோனில் தீ விபத்து ஏற்பட்டது.

பூந்தமல்லி,

பூந்தமல்லியை அடுத்த அகரமேல் பகுதியில் நடராஜ் என்பவருக்கு சொந்தமான பழைய பொருட்களை தரம் பிரித்து ஏற்றுமதி செய்யும் குடோன் உள்ளது. ஊரடங்கு உத்தரவால் தற்போது இந்த குடோன் மூடப்பட்டுள்ளது. நேற்று மதியம் இந்த குடோனில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. குடோனில் இருந்த பழைய பொருட்கள் தீப்பிடித்து எரிந்தது. இதை கண்டதும் அப்பகுதி பொதுமக்கள் பூந்தமல்லி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் கிடங்கிற்குள் பிளாஸ்டிக், ரப்பர் உள்ளிட்ட பொருட்கள் இருந்ததால் தீ கொளுந்து விட்டு எரிந்தது. விருகம்பாக்கம், இருங்காட்டுக்கோட்டை, ஆவடி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து கூடுதலாக 3 தீயணைப்பு வாகனங்களில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.

தீ விபத்தில் குடோனில் இருந்த பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமாயின. அருகிலிருந்த குடியிருப்புகளும் சற்று சேதமடைந்ததுடன், மின் இணைப்புகளும் துண்டிக்கப்பட்டது. ஆனால் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை. இது குறித்து நசரத்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு விசாரணை செய்து வருகின்றனர். 

Next Story