விவசாயிகளிடம் பால் கொள்முதல் செய்து ரூ.32 லட்சம் மோசடி; தம்பதி கைது


விவசாயிகளிடம் பால் கொள்முதல் செய்து ரூ.32 லட்சம் மோசடி; தம்பதி கைது
x
தினத்தந்தி 3 Jun 2020 5:38 AM GMT (Updated: 3 Jun 2020 5:38 AM GMT)

பண்ருட்டி அருகே விவசாயிகளிடம் பால் கொள்முதல் செய்து ரூ.32 லட்சம் மோசடி செய்த தம்பதியை போலீசார் கைது செய்தனர்.

கடலூர்,

பண்ருட்டி அருகே உள்ள காவனூர் பைத்தாம்பாடியை சேர்ந்தவர் பாவாடை (வயது 65), விவசாயி. இவர் 2 பசுமாடுகளை வளர்த்து வந்தார். கடந்த 2016-ம் ஆண்டு புதுச்சேரி தவளக்குப்பம் கிராமத்தை சேர்ந்த செல்வக்குமார்(37), அவரது மனைவி சுதா(33) மற்றும் பைத்தாம்பாடியை சேர்ந்த பன்னீர்செல்வம் ஆகியோர் தாங்கள் பால் குளிரூட்டும் கம்பெனி தொடங்கி உள்ளதாகவும், தங்கள் கம்பெனிக்கு பால் வினியோகம் செய்யும்படியும் பாவாடையிடம் கூறியுள்ளனர். மேலும் பால் கொள்முதல் செய்யப்பட்ட 10 நாட்களுக்கு பிறகு பணம் பட்டுவாடா செய்துவிடுவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

இதை நம்பிய பாவாடை, அந்த கம்பெனிக்கு பால் வினியோகம் செய்தார். இந்நிலையில் பால் கொள்முதல் செய்த பிறகு, அதற்கான தொகை ரூ.24 ஆயிரத்தை பாவாடையிடம் செல்வக்குமார், சுதா, பன்னீர்செல்வம் ஆகியோர் கொடுக்கவில்லை என தெரிகிறது. இதுபற்றி பலமுறை கேட்டும் அவர்கள் உரிய பதில் அளிக்கவில்லை.

இந்த நிலையில் சம்பவத்தன்று அவர்கள் பணம் கொடுக்க மறுப்பு தெரிவித்ததோடு, பாவாடையை திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. அப்போது தான் அவருக்கு, செல்வக்குமார், சுதா, பன்னீர்செல்வம் ஆகியோர் பால் கொள்முதல் செய்துவிட்டு பணம் தராமல் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதுதொடர்பாக விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. சந்தோஷ்குமாரிடம், பாவாடை புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த மனுவில், தன்னிடம் புதுச்சேரி தவளக்குப்பத்தை சேர்ந்த செல்வக்குமார், சுதா, பன்னீர்செல்வம் ஆகியோர் பால் கொள்முதல் செய்து ரூ.24 ஆயிரம் மோசடி செய்து விட்டதாகவும், இது போன்று மேலும் 70 பேரிடம் இருந்து பால் கொள்முதல் செய்து மொத்தம் 32 லட்சத்து 17 ஆயிரத்து 924 ரூபாய் மோசடி செய்துள்ளதாகவும் கூறியிருந்தார்.

மனுவை பெற்றுக்கொண்ட டி.ஐ.ஜி.சந்தோஷ்குமார், அதன் மீது நடவடிக்கை எடுக்கும்படி கடலூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன் பேரில் விவசாயிகளிடம் பால் கொள்முதல் செய்து ரூ.32 லட்சம் மோசடி செய்த சுதா, செல்வக்குமார் ஆகியோரை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

மேலும் தலைமறைவாக உள்ள பன்னீர்செல்வத்தை தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட செல்வக்குமார், சுதா ஆகியோரிடம் இருந்து ரூ.11 லட்சம் மதிப்புள்ள கார் பறிமுதல் செய்யப்பட்டது.

Next Story