ஓட ஓட விரட்டி எலக்ட்ரீசியன் வெட்டிக் கொலை; கொலையாளிகளுக்கு போலீஸ் வலைவீச்சு


ஓட ஓட விரட்டி எலக்ட்ரீசியன் வெட்டிக் கொலை; கொலையாளிகளுக்கு போலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 3 Jun 2020 10:46 PM GMT (Updated: 3 Jun 2020 10:46 PM GMT)

புதுச்சேரியில் எலக்ட்ரீசியன் ஓட ஓட விரட்டி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். கொலையாளிகளை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

புதுச்சேரி,

புதுவை உருளையன்பேட்டை புதிய அய்யனார் கோவில் வீதியைச் சேர்ந்தவர் அருள்சாமி (வயது 32). எலக்ட்ரீசியன். இவருக்கும் பூமியான்பேட்டையை சேர்ந்த சிலருக்கும் இடையே கொடுக்கல் வாங்கல் தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்தநிலையில் அருள்சாமி நேற்று மாலை 100 அடி ரோடு பகுதியில் இருந்துள்ளார்.

அப்போது சிலர் அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் அருள்சாமியை நோக்கி வந்தனர். இதைக்கண்டதும் அந்த நபர்கள் தன்னைத் தான் கொலை செய்ய வருகிறார்கள் என்பதை அறிந்த அவர், நடேசன் நகர் கிழக்கு 3-வது குறுக்குத் தெருவில் புகுந்து ஓடினார். ஆனால் அந்த கும்பல் அவரை ஓட ஓட விரட்டியது.

சிறிது நேரத்தில் அருள்சாமியை மடக்கிய அந்த கும்பல் அவரை மடக்கி தலையில் சரமாரியாக வெட்டினார்கள். இதில் அருள்சாமி நிலைக்குலைந்து ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தார். இதைத்தொடர்ந்து அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது. இதையடுத்து உயிருக்கு ஆபத்தான நிலையில் அருள்சாமி புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்தவுடன் புதுச்சேரி சட்டம்-ஒழுங்கு சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ராகுல் அல்வால், கிழக்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு மாறன் ஆகியோர் கொலை நடந்த இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினார்கள். மேலும் சம்பவ இடத்துக்கு போலீஸ் மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது. அந்த பகுதியை சுற்றி சுற்றி வந்த நாய் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

இந்த கொலை தொடர்பாக உருளையன்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சஜித் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை வலைவீசி தேடி வருகிறார்கள்.

பட்டப்பகலில் பொதுமக்கள் அதிக நடமாட்டம் உள்ள பகுதியில் எலக்ட்ரீசியன் வெட்டிக் கொலை செய்யப்பட்ட பயங்கர சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story