நெட்டப்பாக்கம் அருகே பயங்கரம்: வடமாநில தொழிலாளி கத்தியால் குத்திக் கொலை


நெட்டப்பாக்கம் அருகே பயங்கரம்: வடமாநில தொழிலாளி கத்தியால் குத்திக் கொலை
x
தினத்தந்தி 3 Jun 2020 11:37 PM GMT (Updated: 3 Jun 2020 11:37 PM GMT)

நெட்டப்பாக்கம் அருகே வடமாநில தொழிலாளி கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக சிறுவன் உள்பட 2 பேரை போலீார் கைது செய்தனர்.

நெட்டப்பாக்கம்,

பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் பிரமோத்குமார் சிங் (வயது 42). கடந்த 4 மாதங்களாக நெட்டப்பாக்கம் அருகே மடுகரை ஏரிப்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் இரும்பு கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். அங்குள்ள நத்தமேடு கிராமத்தில் அவரது தாய், தம்பியும் வசித்து வந்தனர். நேற்று முன்தினம் காலை வழக்கம்போல் பிரமோத்குமார் சிங் கம்பெனிக்கு வேலைக்குச் சென்றார்.

ஆனால் வேலை முடிந்து நள்ளிரவு வரை வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகமடைந்து நேற்று காலை 6 மணி அளவில் அண்ணனை தேடி அவரது தம்பி பரோசிங் ஏரிப்பாக்கம் கம்பெனிக்கு சென்றார். அப்போது அந்த பகுதியில் உள்ள முள்புதரில் பிரமோத்குமார் சிங்கின் மோட்டார் சைக்கிள், பேக், செல்போன் ஆகியவை கிடந்தன.

உடனே அந்த இடத்துக்குச் சென்று பார்த்தபோது முள்புதரில் தனது அண்ணன் பிரமோத்குமார் சிங் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதை கண்டு பரோசிங் அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து நெட்டப்பாக்கம் போலீசாருக்கு அவர் தகவல் கொடுத்தார். அதன்பேரில் மேற்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு ரங்கநாதன், இன்ஸ்பெக்டர் கணேசன், சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அப்போது பிரமோத்குமார் சிங்கின் வயிறு, கழுத்து, தலை ஆகிய பகுதியில் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

இதையடுத்து போலீசார் மோப்ப நாயை வரவழைத்தனர். அது சம்பவ இடத்தில் இருந்து சிறிது தூரம் ஓடிப்போய் நின்றது. ஆனால் யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. இதனையடுத்து போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்தை ஐ.ஜி. சுரேந்திரசிங் யாதவ், சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ராகுல் அல்வால் ஆகியோரும் பார்வையிட்டனர்.

இதுதொடர்பாக நெட்டப்பாக்கம் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் ஏரிப்பாக்கம் சாராயக் கடையில் சாராயம் குடிக்கும் போது ஏற்பட்ட தகராறில் கல்மண்டபம் மெயின் ரோட்டைச் சேர்ந்த அருண் (19) என்பவரும், 17 வயது சிறுவனும் சேர்ந்து பிரமோத்குமார் சிங்கை கத்தியால் குத்திக் கொலை செய்துவிட்டு முள்புதரில் போட்டுவிட்டு தப்பிச் சென்றது தெரியவந்தது.

இதனையடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்து கொரோனா பரிசோதனைக்காக கதிர்காமம் கொரோனா அரசு சிறப்பு மருத்துவ மனையில் சேர்த்தனர். தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்த உள்ளனர்.

Next Story