டெல்டா பாசனத்துக்கு கல்லணையில் இருந்து நாளை தண்ணீர் திறப்பு


டெல்டா பாசனத்துக்கு கல்லணையில் இருந்து நாளை தண்ணீர் திறப்பு
x
தினத்தந்தி 15 Jun 2020 12:56 AM GMT (Updated: 15 Jun 2020 12:56 AM GMT)

டெல்டா பாசனத்துக்கு நாளை தண்ணீர் திறக்கப்படும் நிலையில் கல்லணையில் கலெக்டர் கோவிந்தராவ் ஆய்வு மேற்கொண்டார்.

தஞ்சாவூர்,

காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை, சம்பா, தாளடி என முப்போக சாகுபடி செய்வது வழக்கம். குறுவை சாகுபடிக்காக ஆண்டுதோறும் ஜூன் 12-ந் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்படும். அதேபோல் இந்த ஆண்டிற்காக கடந்த 12-ந் தேதி மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தண்ணீர் திறந்து வைத்தார்.

இந்த தண்ணீர் நாளை(செவ்வாய்க்கிழமை) அதிகாலை தஞ்சை மாவட்டம் கல்லணையை வந்தடையும். அதைத்தொடர்ந்து காலை 11 மணிக்கு கல்லணையில் இருந்து டெல்டா பாசனத்துக்காக காவிரி, வெண்ணாறு, கல்லணைக்கால்வாய், கொள்ளிடத்தில் தண்ணீர் திறந்து விடப்பட உள்ளது. இதற்கான முன்னேற்பாடு பணிகளை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

5 அமைச்சர்கள்

நிகழ்ச்சியில் தமிழக வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக்கண்ணு, உணவுத்துறை அமைச்சர் காமராஜ், கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ் மணியன், சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டிநடராஜன், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வளர்மதி, ஆர்.வைத்திலிங்கம் எம்.பி., மாவட்ட கலெக்டர்கள் கோவிந்தராவ் (தஞ்சை), சிவராசு(திருச்சி) ஆனந்த்(திருவாருர்), பிரவீன்நாயர்(நாகை), ரத்னா(அரியலூர்), உமாமகேசுவரி(புதுக்கோட்டை) மற்றும் எம்.எல்.ஏ.க்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர்.

கலெக்டர் ஆய்வு

இந்த நிலையில் தண்ணீர் திறப்பதையொட்டி முன்னேற்பாடு பணி குறித்து கல்லணையில் தஞ்சை மாவட்ட கலெக்டர் கோவிந்தராவ் நேற்று நேரில் ஆய்வு செய்தார். அப்போது தண்ணீரை திறக்கும் எந்திரங்கள், தண்ணீர் வரத்து மற்றும் வெளியேற்றத்தின் அளவுகோல்கள், காவிரி, வெண்ணாறு மற்றும் கல்லணைக்கால்வாய் ஆகியவற்றிற்கு தண்ணீரை பிரித்து அனுப்பும் மதகுகளை பார்வையிட்டார்.

மேலும் தண்ணீர் திறக்கும் நிகழ்ச்சியில் டெல்டா மாவட்டங்களை சேர்ந்த அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், கலெக்டர்கள், அதிகாரிகள் என ஏராளமானோர் கலந்து கொள்வார்கள் என்பதால் அவர்களது வாகனங்களை நிறுத்த தனியாக இடத்தை தயார் செய்யவும், ஏற்கனவே கழிப்பறைகளை சுத்தமாக வைத்திருக்கவும் கலெக்டர் கோவிந்தராவ் உத்தரவு பிறப்பித்தார்.

சமூக இடைவெளி

நிகழ்ச்சியில் பங்கேற்பவர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து நிற்பதற்கு வசதியாக வெள்ளைநிற பெயிண்டால் சதுரம் வரையப்பட்டுள்ளது. ஆய்வின்போது போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரன், காவிரி வடிநில கோட்ட கண்காணிப்பு பொறியாளர் அன்பரசன், வேளாண்மைத்துறை இணை இயக்குனர் ஜஸ்டின், காவிரி வடிநில கோட்ட செயற்பொறியாளர் ராஜன் மற்றும் பொதுப்பணித்துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Next Story