கும்பகோணம் அருகே, கத்தியால் குத்தி தொழிலாளி கொலை - மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

கும்பகோணம் அருகே தொழிலாளி ஒருவரை கத்தியால் குத்திக்கொலை செய்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
திருவிடைமருதூர்,
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருப்பந்துறை மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் செல்வமணி(வயது42). தொழிலாளி. நாச்சியார்கோவில் கீழவீதியில் உள்ள தனது உறவினருக்கு சொந்தமான இறைச்சி கடையில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு மகாலட்சுமி என்ற மனைவியும், தாரணி(14), கோகுல்(12) ஆகிய 2 குழந்தைகளும் உள்ளனர்.
இவர் நேற்று மதியம் அந்த பகுதியில் மது அருந்தி கொண்டிருந்தார். அப்போது ஒரு தரப்பினருடன் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர் அவர் வீடு திரும்பினார்.
இந்த நிலையில் நேற்று மாலை அவர் வீட்டில் இருந்தார். அப்போது அங்கு காரில் வந்த மர்ம நபர்கள் சிலர் செல்வமணியை கத்தியால் குத்தி விட்டு தப்பி சென்றனர்.
இதில் செல்வமணி ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த நாச்சியார்கோவில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று செல்வமணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பாக நாச்சியார்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்வமணியை கொலை செய்த மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.
மேலும் எதற்காக அவர் கொலை செய்யப்பட்டார்? மது அருந்தும்போது ஏற்பட்ட தகராறு காரணமாக கொலை நடந்ததா? என்பது பற்றியும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். தொழிலாளி கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story