மோட்டார் சைக்கிள் தரமறுத்ததால் ஆத்திரம்: நண்பரின் கடையில் செல்போன், பழங்கள் திருடியவர் கைது


மோட்டார் சைக்கிள் தரமறுத்ததால் ஆத்திரம்: நண்பரின் கடையில் செல்போன், பழங்கள் திருடியவர் கைது
x
தினத்தந்தி 26 Jun 2020 3:04 AM GMT (Updated: 26 Jun 2020 3:04 AM GMT)

ராமநாதபுரத்தில் மோட்டார் சைக்கிள் தர மறுத்ததால் ஆத்திரமடைந்த நண்பரின் கடையை உடைத்து செல்போன்கள் திருடியதோடு அருகில் இருந்த பழக்கடையில் பழங்களை திருடியவரை போலீசார் கைது செய்தனர்.

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் பாரதிநகர் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 40). ராமநாதபுரம் பழைய பஸ் நிலையம் அருகில் செல்போன் கடை வைத்து நடத்தி வருகிறார். இவரும் ராமநாதபுரம் பசும்பொன்நகரை சேர்ந்த தங்கபாண்டி(23) என்பவரும் நண்பர்கள். இந்த நிலையில் தங்கபாண்டி தனது நண்பரான சுப்பிரமணியத்திடம் வெளியில் செல்வதற்காக மோட்டார் சைக்கிள் கேட்டுள்ளார். அவர் தரமறுத்ததால் தங்கபாண்டி ஆத்திரமடைந்துள்ளார்.

அதனை தொடர்ந்து சுப்பிரமணியன் இரவு கடையை அடைத்துவிட்டு வீட்டிற்கு சென்றுவிட்டாராம். மோட்டார் சைக்கிள் தரவில்லையே என்ற ஆத்திரத்தில் இருந்த தங்கபாண்டி நள்ளிரவில் செல்போன் கடையை உடைத்து அங்கிருந்த பழுது நீக்க கொடுத்திருந்த 10 செல்போன்கள், மெமரி கார்டுகள், சார்ஜர் உள்ளிட்டவைகளை திருடியதோடு அவர், அருகில் இருந்த பழக்கடையில் 6 கிலோ ஆப்பிள், 4 கிலோ ஆரஞ்சு பழங்களை திருடிச்சென்றுள்ளார்.

ஒப்படைப்பு

நள்ளிரவில் ரோந்து சென்ற கேணிக்கரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோட்டைச்சாமி சந்தேகப்படும்படியாக சுற்றித்திரிந்த தங்கபாண்டியை பிடித்து விசாரித்தபோது அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறியுள்ளார். இதனால் அவரை பிடித்து சென்று விசாரித்தபோது கடையை உடைத்து திருடியது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து சம்பவம் நடந்த பகுதிக்கு உட்பட்ட நகர் காவல் நிலைய போலீசில் தங்கபாண்டி ஒப்படைக்கப்பட்டார். விசாரணையில் தங்கபாண்டி மீது ராமநாதபுரம் மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் திருட்டு, வழிப்பறி, கொலை மிரட்டல் சம்பவங்களில் ஈடுபட்டு 13 வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து தங்கபாண்டியை நகர் போலீசார் கைது செய்தனர்.

Next Story