செங்கல்பட்டு மாவட்டத்தில் மின்னல் வேகத்தில் பரவும் கொரோனா; ஒரே நாளில் 232 பேர் பாதிப்பு


செங்கல்பட்டு மாவட்டத்தில் மின்னல் வேகத்தில் பரவும் கொரோனா; ஒரே நாளில் 232 பேர் பாதிப்பு
x
தினத்தந்தி 26 Jun 2020 11:20 PM GMT (Updated: 26 Jun 2020 11:20 PM GMT)

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா வைரஸ் மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. ஒரே நாளில் 232 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

வண்டலூர், 

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. கீரப்பாக்கம் ஊராட்சி நாகாத்தம்மன் கோவில் தெருவில் வசிக்கும் 50 வயது பெண், கொளப்பாக்கம் காந்தி தெருவை சேர்ந்த 27 வயது வாலிபர், மேல்கல்வாய் ஊராட்சி அம்பேத்கர் நகர் 3வது தெருவை சேர்ந்த 42 வயது ஆண், கண்டிகை பொன்னியம்மன் கோவில் தெருவை சேர்ந்த 19 வயது இளம்பெண் ஆகியோருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது.

கூடுவாஞ்சேரி எம்.கே.நகர் பகுதியில் வசிக்கும் 27 வயது இளம்பெண், வண்டலூர் ஊராட்சி ஓட்டேரி 8வது மெயின் ரோடு பகுதியை சேர்ந்த 48 வயது ஆண், பேரமனூர் எம்.டி.சி. நகர் 2வது மெயின் ரோடு பகுதியை சேர்ந்த 60 வயது முதியவர், காட்டாங்கொளத்தூர் மாதா கோவில் தெருவில் வசிக்கும் 49 வயது ஆண், பாரதியார் தெருவை சேர்ந்த 50 வயது பெண், விவேகானந்தா நகரில் வசிக்கும் ஒரே குடும்பத்தை சேர்ந்த 47 வயது ஆண், 19 வயது இளைஞர், ஊரப்பாக்கம் ஊராட்சி அய்யஞ்சேரி காந்தி நகர் பகுதியை சேர்ந்த 20 வயது இளைஞர், பிரியா நகரை சேர்ந்த 34 வயது பெண், மறைமலைநகர் பகுதியை சேர்ந்த 55 வயது ஆண், 22 வயது இளம்பெண், 42 வயது பெண், 37 வயது ஆண், 55 வயது பெண் ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இவர்களுடன் செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 232 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4,651 ஆக உயர்ந்தது. இவர்களில் 2,463 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நேற்று 76 வயது, 62 வயது முதியவர்கள், 79 வயது மூதாட்டி ஆகிய 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால் பலியானவர்களின் எண்ணிக்கை 68 ஆக உயர்ந்தது. மற்றவர்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை அடுத்த சாலமங்கலம் ஊராட்சியில் உள்ள பாலாஜி நகர் பகுதியை சேர்ந்த 29 வயது வாலிபர், சாலமங்கலம் சிறுமாத்தூர் பகுதியைச் சேர்ந்த 65 வயது மூதாட்டி, மாடம்பாக்கம் ஊராட்சியில் உள்ள பாலாஜி நகர் பகுதியைச் சேர்ந்த 47 வயது பெண், ஒரகடம் தொழிற்பேட்டை பகுதியில் 25 வயது வாலிபர், இதே பகுதியைச் சேர்ந்த 24 வயது வாலிபர், ஒரகடம் வடக்குப்பட்டு மெயின்ரோடு பகுதியை சேர்ந்த 24 வயது வாலிபர் ஆகிய 6 பேருக்கு கொரோனா உறுதியானது.

இவர்களுடன் காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று 90 பேர் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,580 ஆனது. இவர்களில் 733 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். 829 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 18 பேர் பலியானார்கள்.


திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் பிரயாங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக பெண் ஊழியருக்கு கொரோனா வைரஸ் உறுதியானது. அதேபோல ராமன் கோவில் கிராமத்தில் வசித்து வரும் 45 வயதான ஆவடி அரசு ஆஸ்பத்திரி ஊழியரும் பாதிக்கப்பட்டார். எல்லாபுரம் ஒன்றியம் நெய்வேலி கிராமத்தைச் சேர்ந்த 47 வயதான ஒருவர் பெரியபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய ஜீப் டிரைவராக பணியாற்றி வருகிறார். இவருக்கும் கொரோனா உறுதியானது.

தாமரைப்பாக்கம் கூட்டுச்சாலையில் 60 வயது நகைக்கடை உரிமையாளர், பெரியபாளையம் கவரை தெருவைச் சேர்ந்தவர் 37 வயது கூலித்தொழிலாளி ஆகியோருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.

இவர்களுடன் திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 177 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை 3,277 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 1,923 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். 1,299 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். 55 பேர் பலியாகி உள்ளனர்.

Next Story