தலைஞாயிறு அருகே தண்ணீர் திறக்கக்கோரி ஆற்றில் படுத்து விவசாயிகள் போராட்டம்


தலைஞாயிறு அருகே தண்ணீர் திறக்கக்கோரி ஆற்றில் படுத்து விவசாயிகள் போராட்டம்
x
தினத்தந்தி 26 Jun 2020 11:44 PM GMT (Updated: 26 Jun 2020 11:44 PM GMT)

தலைஞாயிறு அருகே தண்ணீர் திறக்கக்கோரி ஆற்றில் படுத்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வாய்மேடு,

திருவாரூர் மாவட்டம் பொன்னிறை வழியாக செல்லும் அரிச்சந்திரா ஆற்றில் இருந்து அடப்பாறு பிரிந்து கடைமடை பகுதிகளுக்கு செல்கிறது. நாகை மாவட்டம் துளசாபுரம், சாக்கை, மகாராஜபுரம், உம்பளச்சேரி உள்ளிட்ட கடைமடை பகுதி கிராமங்கள் அடப்பாறு மூலம் பாசனம் பெறுகின்றன. இந்த ஆற்றை நம்பி 5 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்களில் விவசாயிகள் நெல் சாகுபடி செய்து வருகிறார்கள்.

அடப்பாற்றில் உரிய நேரத்தில் தண்ணீர் கிடைத்தால் மட்டுமே இந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் குறுவை சாகுபடியை சிரமமின்றி மேற்கொள்ள முடியும். ஆனால் பல ஆண்டுகளாக அடப்பாற்றில் உரிய நேரத்தில் தண்ணீர் வராமல் விவசாயம் பாதிக்கப்பட்டு வருகிறது.

பாலம் கட்டுமான பணி

இந்த ஆண்டு மேட்டூர் அணை உரிய நேரத்தில் திறக்கப்பட்டதால் அடப்பாறு பாசன விவசாயிகள் தண்ணீர் கிடைக்கும் நம்பிக்கையுடன் குறுவை சாகுபடிக்கான ஆயத்த பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆனால் இதுவரை அடப்பாறில் தண்ணீர் வரவில்லை.

திருவாரூர் மாவட்டம் பொன்னிறை இயக்கு அணை வரையில் மேட்டூர் அணை நீர் வந்துள்ளது. அந்த பகுதியில் பாலம் கட்டுமான பணிகள் நடைபெறுவதால் அங்கிருந்து அடப்பாற்றில் தண்ணீர் திறந்து விடப்படவில்லை என தெரிகிறது.

ஆற்றில் படுத்து போராட்டம்

இந்த நிலையில் அடப்பாற்றில் தண்ணீர் திறக்காததை கண்டித்தும், கால்நடைகள் குடிக்கவும், குறுவை பாசனத்துக்கும் கடைமடை பகுதிக்கு உடனடியாக தண்ணீர் திறக்க வலியுறுத்தியும் துளசாபுரம் இயக்கு அணை முன்பு ஆற்றில் படுத்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு ஊராட்சி தலைவர் வெங்கடாசலம் தலைமை தாங்கினார். விவசாய சங்க பிரதிநிதிகள் ராஜா, மாணிக்கம், கந்தசாமி, ரவி உள்பட 200-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். போராட்டத்தின்போது விவசாயிகள் ஆற்றில் படுத்து கிடந்தபடி கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். விவசாயிகளின் போராட்டம் காரணமாக அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story