சப்பானிப்பட்டி சோதனைச்சாவடியில் தீவிர வாகன சோதனை கலெக்டர் பிரபாகர் நேரில் ஆய்வு


சப்பானிப்பட்டி சோதனைச்சாவடியில் தீவிர வாகன சோதனை கலெக்டர் பிரபாகர் நேரில் ஆய்வு
x

கிருஷ்ணகிரி மாவட்ட எல்லையான சப்பானிப்பட்டி சோதனைச்சாவடியில் வாகன சோதனை செய்யும் பணியை கலெக்டர் பிரபாகர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கிருஷ்ணகிரி,

கொரோனா பரவலை தடுக்க மாவட்ட எல்லைகளில் சோதனைச்சாவடி அமைக்கப்பட்டு தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்ட எல்லையான சப்பானிப்பட்டியில் வாகன சோதனை செய்யும் பணியை நேற்று கலெக்டர் பிரபாகர் நேரில் சென்று ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல், கிருஷ்ணகிரி துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

பின்னர் கலெக்டர் நிருபர்களிடம் கூறியதாவது:-

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்திற்கு வருகை தரும் வாகனங்கள் இ-பாஸ் பெற்று வரக்கூடிய வாகனங்களின் விவரங்கள் ஆய்வு செய்வதோடு, வாகனங்களின் வருகை குறித்து பதிவேட்டில் பதிவு செய்த பின்னர் அனுப்பி வைக்கப்படுகிறது.

அனுமதிப்பதில்லை

மேலும் கண்டிப்பாக இ-பாஸ் நகல் அல்லது அவர்களது செல்போனில் இ-பாஸ் விவரம் குறித்து ஆய்வு செய்யப்படுகிறது. இ-பாஸ் இல்லாமல் வரக்கூடிய வாகனங்களை மாவட்ட எல்லைக்குள் அனுமதிப்பதில்லை. அதுமட்டுமல்லாமல் மாநிலங்களுக்கிடையேயான சோதனைச் சாவடிகள் 7, மாவட்டங்களுக்கிடயேயான சோதனைச்சாவடிகள் 15 என மொத்தம் 22 சோதனைச்சாவடிகள் 24 மணி நேரமும் வருவாய்த்துறை, காவல் துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் மூலமாக வாகனங்கள் சோதனை செய்யப்பட்டு வருகிறது.

இவ்வாறு கலெக்டர் கூறினார்.

Next Story