கள்ளக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 14 பேருக்கு கொரோனா உறுதி


கள்ளக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 14 பேருக்கு கொரோனா உறுதி
x
தினத்தந்தி 27 Jun 2020 2:07 AM GMT (Updated: 27 Jun 2020 2:07 AM GMT)

கள்ளக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

கண்டாச்சிமங்கலம்,

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் மாவட்ட நிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இருப்பினும் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது கள்ளக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-

பரிசோதனை

கள்ளக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் 40-க்கும் மேற்பட்ட காவலர்கள் பணிபுரிந்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு இங்கு பணிபுரிந்த பெண் தலைமை காவலர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில் கடந்த 24-ந் தேதி கள்ளக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் உள்ள சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீசார், துப்புரவு பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டது.

கிருமி நாசினி தெளிப்பு

இதில் ஒரு சப்-இன்ஸ்பெக்டர், ஒரு பெண் காவலர் உள்ளிட்ட 13 காவலர்களுக்கும், போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் துப்புரவு பணியாளர் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 14 பேரும் சின்னசேலம் அருகே வாசுதேவநல்லூரில் உள்ள தனியார் கல்லூரியில் தனிமைப்படுத்தப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே போலீஸ் நிலையம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது.

திருக்கோவிலூர்

திருக்கோவிலூரிலும் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்த நிலையில் திருப்பாலப்பந்தல் போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் காவலர், திருக்கோவிலூர் மதுவிலக்கு அமல்பிரிவில் பணிபுரியும் காவலர், திருக்கோவிலூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணிபுரியும் லேப் டெக்னீசியன், திருக்கோவிலூர் பொங்கமேட்டு தெருவை சேர்ந்த சுகாதாரத்துறை ஊழியர் ஒருவரின் மகள் என 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர்கள் 4 பேரும் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதையடுத்து தனியார் மருத்துவமனையில் இருந்த நோயாளிகள் மற்றொரு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு, தாசில்தார் சிவசங்கரன் முன்னிலையில் அந்த மருத்துவமனை தற்காலிகமாக மூடப்பட்டது. மேலும் மருத்துவமனையில் வேலைபார்த்த ஊழியர்கள், போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்த காவலர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஷ் உத்தரவின் பேரில் போலீஸ் நிலையங்களுக்கு கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. தொடர்ந்து 2 போலீஸ் நிலையங்களையும் தற்காலிகமாக மூட கள்ளக்குறிச்சி போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) ஜெயக்குமார் உத்தரவிட்டுள்ளார்.

Next Story