சாத்தான்குளம் சம்பவத்துக்கு கண்டனம்: நெல்லை, தென்காசியில் கடையடைப்பு போராட்டம்


சாத்தான்குளம் சம்பவத்துக்கு கண்டனம்: நெல்லை, தென்காசியில் கடையடைப்பு போராட்டம்
x
தினத்தந்தி 27 Jun 2020 5:00 AM GMT (Updated: 27 Jun 2020 5:00 AM GMT)

சாத்தான்குளம் சம்பவத்தை கண்டித்து நெல்லை, தென்காசி ஆகிய மாவட்டங்களில் நேற்று கடையடைப்பு போராட்டம் நடந்தது.

தென்காசி,

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த வியாபாரி ஜெயராஜ், அவருடைய மகன் பென்னிக்ஸ் ஆகியோர் கோவில்பட்டி கிளை சிறையில் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதை கண்டித்து மாநிலம் முழுவதும் நேற்று கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா அறிவித்தார்.

அதன்படி நேற்று மாநிலம் முழுவதும் கடையடைப்பு போராட்டம் நடந்தது. நெல்லை மாவட்டத்தில் முக்கிய ஊர்களில் உள்ள பலசரக்கு கடைகள், மொத்த வியாபார கடைகள் பெரும்பாலும் அடைக்கப்பட்டு இருந்தன.

வெறிச்சோடிய வீதிகள்

நெல்லை மாநகரத்தை பொறுத்த வரையில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவில் பின்புறம் உள்ள மேல கோபுரவாசல் தெருவில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன. அதேபோல் பலசரக்கு கடைகள், ஜெராக்ஸ் கடைகள், டீக்கடைகள், சில ஜவுளி கடைகள் மூடப்பட்டு இருந்தன.

நெல்லை டவுன் வடக்கு ரதவீதியில் உள்ள சில கடைகளும் மூடப்பட்டு இருந்தன. மேல கோபுரவாசல் தெருவில் அதிக அளவு மொத்த பலசரக்கு கடைகள் உள்ளன. அங்குள்ள கடைகளுக்கு வெளியூர்களில் இருந்து அதிக அளவு லாரிகள் மூலம் சரக்குகள் வரும். நேற்று அந்த தெரு வெறிச்சோடி காணப்பட்டது. அதேபோல் வடக்கு ரத வீதியும் வெறிச்சோடியது. சில இடங்களில் கடைகள் திறந்து இருந்தாலும், மக்கள் நடமாட்டம் அதிகம் இல்லை. அதேபோல் நெல்லை டவுன் ரதவீதிகளில் உள்ள நகைக்கடைகளும் மூடப்பட்டன. பேட்டையில் அனைத்து வியாபாரிகளும் கடையடைப்பு நடத்தி தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

வள்ளியூர், நாங்குநேரி, பணகுடியிலும் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. காவல்கிணறு சந்திப்பில் அனைத்து கடைகளும், காமராஜர் காய்கனி மார்க்கெட்டும் மூடப்பட்டன.

தென்காசி

இதேபோல் தென்காசி மாவட்டத்திலும் தென்காசி, ஆலங்குளம், பாவூர்சத்திரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டன. தென்காசி வர்த்தக சங்க தலைவர் ராஜசேகர், செயலாளர் பரமசிவன், பொருளாளர் ஜெயராமன் ஆகியோர் தென்காசியில் அனைத்து கடைகளும் அடைக்கப்படும் என்று அறிவித்து இருந்தனர். அதன்படி தென்காசியில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. இதனால் சுவாமி சன்னதி பஜார், அம்மன் சன்னதி பஜார், ரத வீதிகள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

பாவூர்சத்திரத்தில் வணிகர்கள் சங்கம், பெருந்தலைவர் காமராஜர் தினசரி காய்கறி மார்க்கெட், ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் நிர்வாகிகள் சார்பில் கடையடைப்பு நடந்தது. இதையொட்டி, அங்குள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. காய்கறி மார்க்கெட்டும் மூடப்பட்டது. ஆலங்குளத்தில் மருந்தகங்கள், பால் வாங்குமிடம் தவிர அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. ஆலங்குளம் அருகே நல்லூர் வட்டார வியாபாரிகள் சங்கம் சார்பில் கடையடைப்பு போராட்டம் நடந்தது. 

Next Story