கொரோனா பாதிப்பு எதிரொலி: பர்கூர் நகரில் 15 நாட்களுக்கு முழு ஊரடங்கு


கொரோனா பாதிப்பு எதிரொலி: பர்கூர் நகரில் 15 நாட்களுக்கு முழு ஊரடங்கு
x
தினத்தந்தி 28 Jun 2020 1:50 AM GMT (Updated: 28 Jun 2020 1:50 AM GMT)

கொரோனா பாதிப்பு எதிரொலியாக பர்கூர் நகரில் 15 நாட்களுக்கு முழு ஊரடங்கை கடைபிடிக்க அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

பர்கூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் நகரில் கிருஷ்ணகிரி மெயின் ரோடு, காரகுப்பம் செல்லும் சாலைகளில் வசிக்கும் 3 பேர் நேற்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் 3 பேரும் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். மேலும், கொரோனா பாதித்தவர்கள் வசிக்கும் பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அந்த பகுதிகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டு சாலைகள் அடைக்கப்பட்டன.

இந்தநிலையில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க பர்கூர் நகரில் அனைத்து கடைகளையும் நேற்று காலை 10 மணி அளவில் அடைக்க வேண்டும் என தாசில்தார் சித்ரா தலைமையிலான அலுவலர்கள் உத்தரவிட்டனர். இதையடுத்து பர்கூர் நகரில் உள்ள 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஜவுளிக்கடைகள் உள்ளிட்டவை அடைக்கப்பட்டன. கொரோனா மேலும் பரவாமல் தடுக்க 15 நாட்கள் முழு ஊரடங்கை பொதுமக்கள் வியாபாரிகள், வணிகர்கள் கடைபிடிக்க வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது குறித்து வியாபாரிகள் கூறியதாவது:-

கிருமிநாசினி

பர்கூர் நகரத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஜவுளிக்கடைகள் உள்ளன. தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா, ஆந்திராவில் உள்ள பெரிய நிறுவனங்களுக்கு ஆடைகள் ஏற்றுமதி செய்வதில், பர்கூர் நகரம் முதன்மையாக திகழ்கிறது. இங்கு உள்ள கடைகளில் மொத்தமாகவும், சில்லரையாகவும் துணிகள் விற்பனை செய்யப்படுவதால், விழா காலங்களில் மட்டுமின்றி ஆண்டு முழுவதும் வியாபாரம் நடைபெறும். சில தளர்வுகளுடன் கடைகளை திறக்க அரசு அனுமதியளித்தது. இருப்பினும் ஜவுளிக்கடைகளில் போதிய வியாபாரம் இல்லை. சமூக இடைவெளி, கிருமிநாசினி தெளித்தல் உள்ளிட்ட அரசு விதிமுறைகளை பின்பற்றியே வியாபாரம் செய்து வருகிறோம்.

தற்போது ஐதராபாத்தில் இருந்து ஊர் திரும்பிய 3 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனை காரணம் காட்டி, முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு அனைத்து கடைகளும் 15 நாட்கள் அடைக்க வேண்டும் என அதிகாரிகள் கூறுகின்றனர். ஏற்கனவே வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட தள்ளுவண்டி வியாபாரிகள் உள்ளிட்ட சாலையோர வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்கள் வசித்து வரும் பகுதியை மட்டுமே தனிமைப்படுத்தி கண்காணிக்க வேண்டும். கொரோனா பரவலை தடுக்கும் வகையிலும், மக்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையிலும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

இதேபோல் சத்தலப்பள்ளி, பி.ஆர்.ஜே. மாதப்பள்ளி, மிட்டப்பள்ளி கிராமங்களிலும் 15 நாட்கள் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கெலமங்கலம் பேரூராட்சி, தேன்கனிக்கோட்டை பேரூராட்சி மற்றும் சுற்று வட்டாரத்தில் சில கிராமங்களில் ஊரடங்கு அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story