சேலம் மத்திய சிறை வார்டனுக்கு கொரோனா அறிகுறி ரேஷன் அரிசி கடத்தல் வழக்கில் கைதான வாலிபரும் பாதிப்பு


சேலம் மத்திய சிறை வார்டனுக்கு கொரோனா அறிகுறி ரேஷன் அரிசி கடத்தல் வழக்கில் கைதான வாலிபரும் பாதிப்பு
x
தினத்தந்தி 28 Jun 2020 2:32 AM GMT (Updated: 28 Jun 2020 2:32 AM GMT)

சேலம் மத்திய சிறை வார்டனுக்கு கொரோனா அறிகுறி ஏற்பட்டுள்ளது. மேலும் ரேஷன் அரிசி கடத்தல் வழக்கில் கைதான வாலிபரும் பாதிக்கப்பட்டுள்ளார்.

சேலம்,

சேலம் மத்திய சிறையில் தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் என 850-க்கும் மேற்பட்டவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் பரவுவதால் மத்திய சிறையில் புதிய கைதிகளை அடைப்பதில்லை. மேலும் சிறைக்குள் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் சிறையில் பணியாற்றிய வார்டன் ஒருவருக்கு கொரோனா அறிகுறி இருப்பது பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் சிறை அதிகாரிகள் மற்றும் கைதிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதையடுத்து அவர் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

பரவியது எப்படி?

சமீபத்தில் தூத்துக்குடி கிளை சிறையில் இருந்து வார்டனாக பதவி உயர்வு பெற்று சேலம் மத்திய சிறைக்கு ஒருவர் வந்தார். வந்த நாளே அவருக்கு கொரோனா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவர் தற்போது கொரோனா அறிகுறி ஏற்பட்ட வார்டனின் அறையில் தான் தங்கி இருந்ததாக கூறப்படுகிறது.

எனவே அவர் மூலம் இவருக்கு பரவி இருக்கலாம் என்று அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். மேலும் அவருடன் தொடர்பில் இருந்த அதிகாரிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கைதான வாலிபர்

சேலம் அருகே உள்ள பூசாரிப்பட்டி பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மினி லாரியில் கடத்தி வரப்பட்ட 5 டன் ரேஷன் அரிசியை உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 2 பேரை போலீசார் தேடி வந்தனர். இந்தநிலையில் ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பாக காடையாம்பட்டி பகுதியை சேர்ந்த 2 வாலிபர்களை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். இதையடுத்து அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

இதில் வாலிபர் ஒருவருக்கு கொரோனா அறிகுறி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த வாலிபர் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள தனிமை வார்டில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மற்றொருவர் கருப்பூரில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரியில் தனிமைப்படுத்தப்பட்டார். மேலும் வாலிபர்களை கைது செய்யும் பணியில் ஈடுபட்ட போலீசாரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட உள்ளது.

Next Story