தூத்துக்குடியில் மேலும் 43 பேருக்கு கொரோனா நெல்லை- தென்காசியில் 23 பேர் பாதிப்பு


தூத்துக்குடியில் மேலும் 43 பேருக்கு கொரோனா நெல்லை- தென்காசியில் 23 பேர் பாதிப்பு
x
தினத்தந்தி 28 Jun 2020 5:17 AM GMT (Updated: 28 Jun 2020 5:17 AM GMT)

தூத்துக்குடியில் நேற்று 43 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. நெல்லை, தென்காசியில் 23 பேர் பாதிக்கப்பட்டனர்.

தென்காசி,

தூததுக்குடி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 43 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதில் கோவில்பட்டி அருகே இளையரசனேந்தல் பகுதியைச் சேர்ந்த பெண் வருவாய் ஆய்வாளர், கொல்லம்பரம்பு பகுதியைச் சேர்ந்த கிராம நிர்வாக உதவியாளர் உள்ளிட்டவர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.

இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 832 ஆக உயர்ந்தது.

நெல்லையில் 12 பேர்

நெல்லை மாவட்டத்துக்கு வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வருபவர்களால் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் நேற்று நெல்லை மாவட்டத்தில் 12 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் ஒருவர் வெளி மாநிலத்தில் இருந்து வந்தவர் ஆவார். மீதி உள்ள 11 பேர் நெல்லை மாநகர பகுதியை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.

இதில் நெல்லை சிந்துபூந்துறை பகுதியில் வசித்து வரும் ஒரு நர்சு, பாளையங்கோட்டை மண்டல பகுதியில் 2 வங்கி ஊழியர்கள், நெல்லை டவுன் பகுதியை சேர்ந்த 2 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும் பெண் போலீஸ் ஒருவருக்கும் தொற்று பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் உள்ள குடியிருப்பு தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு உள்ளது. கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் சுகாதாரப்பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.

நெல்லை மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை 723 ஆக உயர்ந்துள்ளது.

தென்காசி

தென்காசி மாவட்டத்தில் மொத்தம் 11 பேருக்கு நேற்று தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் தென்காசி பகுதியை சேர்ந்த 5 பேர், கடையநல்லூர் பகுதியை சேர்ந்த 2 பேர், ஆலங்குளம் பகுதியை சேர்ந்த 2 பேர், கீழப்பாவூர், கடையம் பகுதியை சேர்ந்த தலா ஒருவர் ஆவர்.

அவர்கள் அனைவரும் தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து வரப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்கள் வசித்து வந்த பகுதியில் கிருமிநாசினி தெளிக் கப்பட்டது. நேற்றைய நிலவரப்படி தென்காசி மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை 303 ஆக உயர்ந்துள்ளது.

Next Story