திருப்பத்தூரில் மனைவியை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற கணவன் கைது


திருப்பத்தூரில் மனைவியை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற கணவன் கைது
x
தினத்தந்தி 28 Jun 2020 5:25 AM GMT (Updated: 28 Jun 2020 5:25 AM GMT)

திருப்பத்தூரில் மனைவியை பெட்ரோல் ஊற்றி எரித்து கொன்ற கணவனை போலீசார் கைது செய்தனர்.

திருப்பத்தூர்,

திருப்பத்தூர் தியாகி சிதம்பரனார் தெருவைச் சேர்ந்தவர் சேஷாசலம் (வயது 65), நகைக் கடைகளில் கணக்கு எழுத்தாளராக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி மல்லிகா (60). இவர்களுக்கு ஒரு மகன், 2 மகள்கள் உள்ளனர். மகள்கள் திருமணமாகி வெளியூரில் வசிக்கின்றனர். இவரது மகன் குடும்பத்துடன் தரை தளத்திலும், சேஷாசலம், மல்லிகா இருவரும் மாடியிலும் வசித்து வருகின்றனர்.

சேஷாசலத்திற்கு உடலில் வெள்ளை நிற தழும்புகள் ஏற்பட்டு பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் அவருடைய மனைவி அவரை சரியாக கவனிப்பதில்லை என கூறப்படுகிறது. இதனால் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கணவன்-மனைவி இருவரும் வீட்டு மொட்டை மாடியில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.

பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை

அப்போது அவர்களுக்குள் திடீரென தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த சேஷாசலம் வீட்டில் இருந்த பெட்ரோலை எடுத்து மல்லிகாவின் மீது ஊற்றி தீ வைத்தார். இதில் மல்லிகாவின் உடல் முழுவதும் தீ மளமளவென பற்றி எரிந்தது. உடனடியாக சேஷாசலம் அங்கிருந்து தப்பி வெளியே சென்றுவிட்டார்.

மல்லிகாவின் அலறல் சத்தம் கேட்டு அவரது மகன் மற்றும் அக்கம்பக்கத்தில் வசிப்பவர்கள் வந்து பார்த்தனர். அதற்குள் மல்லிகா உடல் கருகி பரிதாபமாக இறந்தார். உடனடியாக அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் டவுன் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்ததும் போலீஸ் இன்ஸ்பெக்டர் பேபி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மல்லிகாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே சேஷாசலம் திருப்பத்தூர் டவுன் போலீஸ் நிலையத்திற்கு சென்று சரணடைந்தார்.

இதுகுறித்து திருப்பத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சேஷாசலத்தை கைது செய்தனர். மேலும் அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story