சேலம் மாவட்டத்தில், ஒரேநாளில் மருத்துவ மாணவர்கள் உள்பட 109 பேருக்கு கொரோனா


சேலம் மாவட்டத்தில், ஒரேநாளில் மருத்துவ மாணவர்கள் உள்பட 109 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 29 Jun 2020 2:11 AM GMT (Updated: 29 Jun 2020 2:11 AM GMT)

சேலம் மாவட்டத்தில் நேற்று ஒரேநாளில் மருத்துவ மாணவர்கள் உள்பட 109 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

சேலம்,

சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மற்றும் வெளிநாடு, வெளிமாநிலம், பிற மாவட்டங்களில் இருந்து சேலம் வந்தவர்கள் என 700-க்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்கள் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். இவர்களில் 300-க்கும் மேற்பட்டவர்கள் குணமடைந்து ‘டிஸ்சார்ஜ்‘ செய்யப்பட்டனர். நேற்று முன்தினம் 34 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் சேலம் மோகன் குமாரமங்கலம் அரசு மருத்துவக்கல்லூரிக்கு படிக்க வந்த பட்ட மேற்படிப்பு மாணவர்கள் 5 பேர் உள்பட 109 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று உறுதிசெய்யப்பட்டது.

109 பேர்

சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 8 பேர், ஓமலூரில் 14 பேர், பெத்தநாயக்கன்பாளையத்தில் 13 பேர், கொங்கணாபுரம் பகுதியில் 10 பேர் மற்றும் தாரமங்கலம், அயோத்தியாப்பட்டணம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த சிலர், சென்னையில் இருந்து சேலம் வந்த 2 பேர், தேனியில் இருந்து வந்த 13 பேர், தர்மபுரி, சிவகங்கை, கள்ளக்குறிச்சி ஆகிய பகுதிகளில் இருந்து சேலம் வந்த தலா 3 பேர் மற்றும் மருத்துவ மாணவர்கள் உள்பட79 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.

இதுதவிர கர்நாடக மாநிலத்தில் இருந்து சேலம் வந்த 10 பேர், ராஜஸ்தானில் இருந்து வந்த 2 பேர், மத்திய பிரதேசத்தில் இருந்து வந்த 11 பேர் , டெல்லியில் இருந்து வந்த 4 பேர், ஒடிசாவில் இருந்து வந்த ஒருவர், ஆந்திராவில் இருந்து வந்த 2 பேர் என 30 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளானார்கள். இவர்கள் அனைவரும் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள தனிமை வார்டில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Next Story