சிவகாசி வட்டாரத்தில் ஒரே நாளில் 35 பேருக்கு கொரோனா


சிவகாசி வட்டாரத்தில் ஒரே நாளில் 35 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 29 Jun 2020 4:58 AM GMT (Updated: 29 Jun 2020 4:58 AM GMT)

சிவகாசி வட்டாரத்தில் நேற்று ஒரே நாளில் 35 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

சிவகாசி,

தொழில் நகரமான சிவகாசிக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வியாபாரிகள் மற்றும் சரக்கு வாகனங்கள் ஓட்டி வருபவர்கள் வந்து செல்கிறார்கள். இந்தநிலையில் கொரோனா பரவலை தடுக்க கடந்த சில வாரங்களுக்கு முன்னர் வரை சிவகாசி பகுதிக்கு வெளிமாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து வந்த லாரிகளுக்கு தடைவிதிக்கப்பட்ட நிலையில் தமிழக அரசு அறிவித்த தளர்வு காரணமாக கடந்த சில வாரங்களாக வாகனங்கள் அதிக அளவில் சிவகாசிக்கு வந்து சென்றன.

ஆரம்ப கட்டத்தில் சிவகாசி பகுதியில் கொரோனா தொற்று பரவாத நிலையில் தற்போது நகரப்பகுதியிலும், கிராமப்பகுதியிலும் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது.

முன் எச்சரிக்கை நடவடிக்கை

சென்னையில் இருந்து சிவகாசிக்கு வந்த பலர் மூலம் இங்கு கொரோனா தொற்று வேகமாக பரவ தொடங்கியது. இதனால் பல கிராமங்களில் கொரோனா வேகமாக பரவியது. அரசு அறிவித்த எந்த உத்தரவையும் சிவகாசி பகுதி மக்கள் கடைபிடிக்கவில்லை.

அதிலும் குறிப்பாக சாலைகளில் மக்கள் கூட்டம் வழக்கம் போல் இருந்தது. இதேநிலை தொடர்ந்தால் சிவகாசியில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருக்கும் என்றும் நகராட்சி அதிகாரிகளும், சுகாதார அதிகாரிகளும் முன்எச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் முன்னாள் நகர்மன்ற தலைவர் சபையர் ஞானசேகரன் எச்சரித்து இருந்தார்.

35 பேருக்கு கொரோனா

இந்தநிலையில் நேற்று ஒரே நாளில் மட்டும் சிவகாசி வட்டாரத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 35 ஆக அதிகரித்து அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சிவகாசி நகர் பகுதியில் வசித்து வந்த 80 வயது முதியவர் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு கடந்த சில நாட்களுக்கு முன்னர் இறந்தார். இந்தநிலையில் அவரது குடும்பத்தை சேர்ந்த 12 பேருக்கு தற்போது கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதேபோல் சிவகாசி பகுதியை சேர்ந்த டாக்டர் ஒருவருக்கும், தனியார் வங்கி மேலாளர் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இப்படி தொடர்ந்து முக்கிய பதவிகளில் உள்ளவர்களுக்கும், பொதுமக்கள்அதிகம் சந்திக்கும் நபர்களுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு வருவதை கண்டு பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

சிறப்பு முகாம்

எனவே கொரோனா பரவுவதை தடுக்க சிவகாசி வட்டாரத்துக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் மக்கள் தங்களை தாங்களே தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று டாக்டர் ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.

சிவகாசி நகர பகுதியிலும், கிராமப்பகுதியிலும் சிறப்பு முகாம் அமைத்து கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும். இதுகுறித்து மாவட்ட நிர்வாகமும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் கலந்து ஆலோசனை செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Next Story