ஆத்தூரில், பெண்களை வீட்டில் அடைத்து வைத்து பாலியல் தொல்லை - மக்கள் தேசம் கட்சி பிரமுகர் உள்பட 2 பேர் கைது


ஆத்தூரில், பெண்களை வீட்டில் அடைத்து வைத்து பாலியல் தொல்லை - மக்கள் தேசம் கட்சி பிரமுகர் உள்பட 2 பேர் கைது
x
தினத்தந்தி 29 Jun 2020 10:30 PM GMT (Updated: 29 Jun 2020 7:38 PM GMT)

ஆத்தூரில், பெண்களை வீட்டில் அடைத்து வைத்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். இது தொடர்பாக மக்கள் தேசம் கட்சி பிரமுகர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஆத்தூர்,

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் மாணவிகள், இளம் பெண்களை காதல் வலையில் வீழ்த்தி அவர்களை ஆசைவார்த்தை கூறி, பாலியல் பலாத்காரம் செய்ததுடன், வீட்டில் அடைத்து வைத்து ஒரு கும்பல் கொடுமைப்படுத்தியது. மேலும் வீடியோ எடுத்தும் அந்த கும்பல் பெண்களை மிரட்டியது. அந்த கும்பலை கடந்த சில மாதங்களுக்கு முன்பு போலீசார் கைது செய்தனர்.

இதே போல குமரி மாவட்டம் நாகர்கோவிலில் காசி என்ற வாலிபர் சமூகவலைத்தளங்கள் மூலம் பல பெண்களுடன் பழகி, அவர்களை ஆபாச படம் எடுத்து மிரட்டினார். அந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர், தற்போது இதே போன்ற ஒரு சம்பவம் சேலம் மாவட்டம் ஆத்தூரில் நடைபெற்றுள்ளது. இது பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

ஆத்தூர் மந்தைவெளி பகுதியை சேர்ந்தவர் சந்து மணி ராஜா. இவரது மகன் சின்னதுரை (வயது 30). இவர் மக்கள் தேசம் கட்சியின் நகர செயலாளராக உள்ளார். ஆத்தூர் ஜோதி நகரை சேர்ந்தவர் மோகன்பாபு (28). 2 பேரும் நண்பர்கள். இவர்கள் ஆத்தூர் விநாயகபுரத்தில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து அங்கு தங்கி இருந்தனர்.

இந்த நிலையில் இவர்களது வீட்டில் 4 பெண்கள் அடைக்கப்பட்டு உள்ளதாக ஆத்தூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் உமாசங்கர், சப்-இன்ஸ்பெக்டர் அமிர்தலிங்கம் மற்றும் போலீசார் அதிரடியாக அந்த வீட்டுக்குள் நுழைந்தனர். அப்போது அந்த வீட்டில் 4 பெண்கள் மற்றும் சின்னதுரை, மோகன்பாபு ஆகியோர் இருந்தனர். போலீசாரை பார்த்ததும் அந்த பெண்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.

போலீசாரின் விசாரணையில் மோகன்பாபு, சின்னதுரை ஆகியோர் அந்த 4 பெண்களை வீட்டில் அடைத்து வைத்து பாலியல் தொல்லை கொடுத்ததும், அவர்கள் 2 பேரும் இதே போன்று பல பெண்களை அடைத்து வைத்து சித்ரவதை செய்ததும் தெரியவந்தது. போலீசார் விசாரணையில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன.

செல்போன் மூலமும், முகநூல் மற்றும் வாட்ஸ்-அப் போன்ற சமூக வலைத்தளங்களில் பல பெண்களுடன் சின்னதுரை, மோகன்பாபு ஆகியோர் தொடர்பை ஏற்படுத்திக்கொள்வார்கள். பின்னர் அந்த பெண்களில் யாருக்காவது ஆண்களுடன் தொடர்பு உள்ளதா? என்பதை அறிவார்கள். கணவர் தவிர வேறு ஆண்களுடன் தொடர்பு உள்ள பெண்களை கண்டுபிடிப்பார்கள்.

உடனே அந்த பெண்களை தொடர்பு கொண்டு, ஆண்களுடன் உள்ள தொடர்பை உங்களது குடும்பத்தில் தெரிவிக்காமல் இருக்க வேண்டும் என்றால், எங்களது வீட்டுக்கு வந்து, நாங்கள் சொல்லும் நபர்களுடன் உல்லாசமாக இருக்க வேண்டும் என்று கூறி 2 பேரும் மிரட்டி வந்துள்ளனர். இதன்படி அவர்கள் வாடகைக்கு வசித்து வந்த வீட்டுக்கு 10-க்கும் மேற்பட்ட பெண்களை அழைத்து வந்து உல்லாசமாக இருந்ததுடன், வேறு சிலருடனும், அந்த பெண்களை தங்க வைத்து, பணம் சம்பாதித்துள்ளனர்.

ஆத்தூர், நரசிங்கபுரம் பகுதியை சேர்ந்த வாலிபர்கள், தொழில் அதிபர்கள் ஆகியோர் இவர்களிடம் சிக்கும் பெண்களை கட்டாயப்படுத்தி உல்லாசமாக இருந்துள்ளனர். மேலும் பூங்கா, சினிமா தியேட்டர் என பொது இடங்களில் ஆண்களுடன் வரும் பெண்களை நோட்டமிடுவார்கள். இதில் கணவரை தவிர்த்து வேறு நபருடன் வரும் பெண்களை கண்டுபிடித்து, அவர்களை மிரட்டி தங்களது வலையில் விழ வைத்ததும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இவர்களிடம் தொழில் அதிபர்கள் சிலரின் மனைவிகளும், கணவரை பிரிந்து வாழும் பெண்களும் சிக்கி உள்ளனர்.

இதைத்தொடர்ந்து போலீசார் மோகன்பாபு, சின்னதுரை ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் சிக்கி இருந்த 4 பெண்களிடமும், போலீசார் வேறு ஆண்களுடன் தொடர்பு வைத்துக்கொள்ளக்கூடாது, ஒழுங்காக இருக்க வேண்டும் என்று எச்சரித்து அனுப்பி வைத்தனர். கைதான 2 பேரும் எத்தனை பெண்களை சிக்க வைத்து கொடுமைப்படுத்தி உள்ளனர்? அவர்களுக்கு வேறு யாருடன் தொடர்பு உள்ளது? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் இதில் தொடர்புடைய சில வாலிபர்களை போலீசார் தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் ஆத்தூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story