மும்பையில் மக்கள் நெருக்கடியை குறைக்க பீகார், உத்தரபிரதேசத்தில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும் சிவசேனா கருத்து


மும்பையில் மக்கள் நெருக்கடியை குறைக்க  பீகார், உத்தரபிரதேசத்தில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும் சிவசேனா கருத்து
x
தினத்தந்தி 30 Jun 2020 12:49 AM GMT (Updated: 30 Jun 2020 12:49 AM GMT)

மும்பையில் மக்கள் நெருக்கடியை குறைக்க பீகார், உத்தரபிரதேசத்தில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும் என சிவசேனா கூறி உள்ளது.

மும்பை,

மத்திய நெடுஞ்சாலை துறை மந்திரி நிதின் கட்காரி கடந்த மாதம் கொரோனா பரவலை கருத்தில் கொண்டு, மக்கள் நெருக்கம் அதிகம் உள்ள மும்பையில் பேரழிவு ஆபத்து உள்ளது. எனவே அங்கு நிலவும் நெருக்கத்தை குறைக்க வேண்டும் என கூறியிருந்தார். இதற்கு பதிலளிக்கும் வகையில் சிவசேனா கட்சியின் சாம்னா பத்திரிகையில் கூறியிருப்பதாவது:-

மும்பை, புனே போல உத்தரபிரதேசத்திலும், பீகாரிலும் ஸ்மார்ட் நகரங்கள் அமைத்தால் மும்பை மற்றும் புனேயில் இயற்கையாகவே மக்கள் நெருக்கம் குறைந்துவிடும். அந்த மாநிலங்களில் முதலில் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும்.

ஊரடங்கு தொடங்கிய போது 8 லட்சம் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் மும்பையில் இருந்து உத்தரபிரதேசம், பீகார், மேற்கு வங்கம், ஒடிசா போன்ற மாநிலங்களுக்கு சென்றனர். புனேயில் இருந்து 3 லட்சம் பேர் சென்றனர். தற்போது சுமார் 1½ லட்சம் தொழிலாளர்கள் மீண்டும் மராட்டியம் திரும்பி உள்ளனர். அவர்களுக்கு சொந்த மாநிலத்தில் எந்த ேவலையும் இல்லை. அந்த மாநிலங்கள் வளர்ச்சி அடையவில்லை என்பது தான் இதற்கு காரணம்.

எனவே அந்த மாநிலங்களில் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டாலே கட்காரியின் கவலை தானாக தீர்க்கப்படும். மராட்டியத்துக்கு திரும்பும் தொழிலாளர்களால் மும்பை, புனே நகரங்களுக்கு சுமை அதிகரித்து உள்ளது. மும்பை நாட்டின் மக்கள் தொகை சுமையையும் மற்றும் கருவூலத்துக்கும் அதிகளவில் பங்களித்து வருகிறது. ஆனால் கொரோனாவுக்கு எதிராக போராட உரிய பங்கு மத்திய அரசிடம் இருந்து அதற்கு கிடைக்கவில்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story