லோடு ஆட்டோவை மோதவிட்டு பழ வியாபாரி கொடூரக்கொலை: சக வியாபாரிக்கு வலைவீச்சு


லோடு ஆட்டோவை மோதவிட்டு பழ வியாபாரி கொடூரக்கொலை: சக வியாபாரிக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 7 July 2020 10:45 PM GMT (Updated: 7 July 2020 6:55 PM GMT)

கயத்தாறு அருகே லோடு ஆட்டோவை மோதவிட்டு பழ வியாபாரி கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக சக வியாபாரியை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

கயத்தாறு, 

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகிலுள்ள வேடப்பட்டி சொக்கலிங்கபுரத்தை சேர்ந்த சண்முகய்யா மகன் முத்துப்பாண்டி (வயது32), கொய்யாப்பழ வியாபாரி.

இவர், கோவில்பட்டி பசுவந்தனை ரோடு ஓரத்தில் சிறிய கூடாரம் அமைத்து கொய்யாப்பழம் வியாபாரம் செய்து வந்தார். இதற்காக இவர் தினமும் அதிகாலையில் ஊரில் இருந்து மோட்டார் சைக்கிளில் கயத்தாறு பகுதிக்கு சென்று தனியார் தோட்டங்களில் கொய்யாப்பழத்தை வாங்கி கொண்டு, கோவில்பட்டி வந்து விற்பனை செய்வது வழக்கம்.

கொரோனா தொற்று பரவல் மற்றும் ஊரடங்கு காரணமாக கடந்த மாதம் இவர் கொய்யாப்பழ வியாபாரத்துக்கு செல்லவில்லை. ஊரடங்கு தளர்த்தபட்ட நிலையில் மீண்டும் கொய்யாப்பழம் வியாபாரத்துக்கு சென்றபோது, இவர் விற்பனை செய்த இடத்தில் கோவில்பட்டி தெற்கு திட்டங்குளத்தை சேர்ந்த ஊர்காவலன் மகன் பசுபதிபாண்டி (வயது 19) பழங்கள் விற்பனை செய்துள்ளார்.

இதுதொடர்பாக முத்துப்பாண்டிக்கும், பசுபதிபாண்டிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதுபற்றி முத்துப்பாண்டி கோவில்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று அதிகாலையில் மோட்டார் சைக்கிளில் கயத்தாறு அருகே அய்யனாரூத்தில் உள்ள தனியார் கொய்யாப்பழ தோட்டத்துக்கு தேவர்குளம் சாலையில் முத்துப்பாண்டி சென்று கொண்டிருந்தார். அதிகாலை 5.30 மணிக்கு எதிரே லோடு ஆட்டோ ஒன்று அதிவேகமாக வந்தது.

கண் இமைக்கும் நேரத்தில் அந்த ஆட்டோ திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட முத்துப்பாண்டி பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார்.

அந்த ஆட்டோவும் சேதமடைந்ததால், அதில் வந்த மர்ம நபர் தப்பி ஓடிவிட்டார். அந்த வழியாக சென்றவர்கள் கொடுத்த தகவலின் பேரில் கயத்தாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்து மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். இறந்து கிடந்த முத்துப்பாண்டி உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

முதலில் போலீசார் விபத்து என்று விசாரணை நடத்தி வந்த நிலையில், முத்துப்பாண்டி மனைவி முத்துப்பேச்சி மற்றும் உறவினர்கள் போலீஸ் நிலையத்தில் ஆஜராகி முன்விரோதத்தில் முத்துப்பாண்டி கொலை செய்யப்பட்டுள்ளதாக புகார் தெரிவித்தனர். அதன்பேரில், கயத்தாறு போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணையில், ஒரே இடத்தில் பழ வியாபாரம் செய்வதில் ஏற்பட்ட பிரச்சினையால் உருவான முன்விரோதத்தில் பசுபதிபாண்டி, முத்துப்பாண்டியை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். இதற்காக நாயக்கர்பட்டி கிராமத்தை சேர்ந்த கருப்பசாமி மகன் அசோக்குமாரின் லோடு ஆட்டோவை ஒரு வாரத்துக்கு வாடகைக்கு எடுத்தார். மேலும், அய்யனாரூத்து பகுதியில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியிருந்த பசுபதிபாண்டி சில நாட்களாக முத்துப்பாண்டி வந்து செல்வதை நோட்டமிட்டுள்ளார்.

நேற்று அதிகாலையில் கயத்தாறில் இருந்து தேவர்குளம் சாலையில் முத்துப்பாண்டி வருவதை அறிந்த பசுபதிபாண்டி லோடு ஆட்டோவை வேகமாக ஓட்டியவாறு வந்துள்ளார். அய்யனாரூத்து அருகில் முத்துப்பாண்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது லோடு ஆட்டோவை மோதவிட்டார். மோட்டார் சைக்கிளில் இருந்து பலத்த காயங்களுடன் கீழே விழுந்த முத்துப்பாண்டி மீது மீண்டும் ஆட்டோவை அவர் ஏற்றியதாக கூறப்படுகிறது. இதில் முத்துப்பாண்டி ரத்தவெள்ளத்தில் பலியானதை அறிந்தவுடன் பசுபதிபாண்டி லோடு ஆட்டோவில் தப்பிச்செல்ல முயன்றார். ஆனால், ஆட்டோ பழுதாகி நின்று விட்டதால், அதை அங்கேயே விட்டுவிட்டு அவர் தப்பி சென்ற திடுக்கிடும் தகவல் தெரியவந்தது.

இதையடுத்து பசுபதிபாண்டி மீது கயத்தாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்து கொலை வழக்குப்பதிவு செய்தார். மேலும், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், கோவில்பட்டி போலீஸ் துணை சூப்பிரண்டு கலைக்கதிரவன், மணியாச்சி போலீஸ் துணை சூப்பிரண்டு சங்கர், கழுகுமலை இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி ஆகியோர் சம்பவ பகுதியை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

நேற்று மாலையில் பசுபதிபாண்டியின் 16 வயது தம்பியை கயத்தாறு போலீசார் பிடித்தனர். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தப்பி ஓடிய பசுபதிபாண்டியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த பயங்கர கொலை சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story