ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 10 பேருக்கு கொரோனா: மொத்த பாதிப்பு 300-ஐ நெருங்கியது


ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 10 பேருக்கு கொரோனா: மொத்த பாதிப்பு 300-ஐ நெருங்கியது
x
தினத்தந்தி 8 July 2020 11:00 PM GMT (Updated: 8 July 2020 6:50 PM GMT)

ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 10 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதியானது. இதனால் மொத்த பாதிப்பு 300-ஐ நெருங்கியது.

ஈரோடு, 

கொரோனா வைரஸ் தொற்று 2-வது கட்டமாக ஈரோடு மாவட்டத்தில் பரவி வருகிறது. இதன் தொடக்கத்தில் இருந்தே நோய் பரவுவதை தடுக்க பல்வேறு கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்காக கொரோனா பரிசோதனையும் அதிகப்படுத்தப்பட்டது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் விரைவாக கண்டறியப்பட்டார்கள். கடந்த சில நாட்களுக்கு முன்பு பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. கடந்த 6-ந் தேதி அதிகபட்சமாக 40 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதனால் ஈரோடு மாவட்டத்திலும் கொரோனா பரவல் அதிகரித்து கொண்டே சென்றதாக மக்கள் அச்சம் அடைந்தனர்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தொற்று கண்டறியப்படவில்லை என்று மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டு இருந்தது. இது ஈரோடு மக்களுக்கு சற்று நிம்மதியை அளித்தது.

நேற்று மாலை வெளியிடப்பட்ட பட்டியலின்படி ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 10 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய் யப்பட்டது. இதனால் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 296 ஆக உயர்ந்தது. புதிதாக பாதிக்கப்பட்டவர்களில் ஈரோடு மாநகராட்சி பகுதியில் 8 பேரும், கோபிசெட்டிபாளையம், பவானி ஆகிய பகுதிகளில் தலா ஒருவரும் உள்ளனர். இதுவரை 89 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 202 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

Next Story