ஈரோட்டில் கொரோனாவுக்கு வாலிபர் பலி: உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு


ஈரோட்டில் கொரோனாவுக்கு வாலிபர் பலி: உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு
x
தினத்தந்தி 9 July 2020 11:15 PM GMT (Updated: 9 July 2020 7:13 PM GMT)

ஈரோட்டில் கொரோனாவுக்கு வாலிபர் பலியானார். அவரது உடலை அடக்கம் செய்ய சிலர் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோடு, 

ஈரோடு மூலப்பாளையம் காந்தி நகரை சேர்ந்த 33 வயது வாலிபர் ஒருவருக்கு கடந்த 5-ந்தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவர் ஈரோடு பெருந்துறை ரோட்டில் உள்ள தனியார் சூப்பர் மார்க்கெட்டில் மேற்பார்வையாளராக பணியாற்றி வந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் 5 வயதில் ஒரு குழந்தை உள்ளது. வாலிபர் உயிரிழந்ததை தொடர்ந்து ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனாவால் உயிரிழந்த வாலிபரின் உடலை அடக்கம் செய்தவற்காக அவரது உறவினர்கள் மற்றும் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் ஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு வெண்டிபாளையத்தில் உள்ள கல்லறை தோட்டத்திற்கு நேற்று கொண்டு வந்தனர். முழு கவச உடையுடன், கொரோனாவால் உயிரிழந்தவரின் உடலை அடக்கம் செய்ய எடுத்து செல்வதை பார்த்த அந்த பகுதியை சேர்ந்த சிலர் கல்லறை தோட்டத்திற்கு திரண்டு வந்தனர்.

பின்னர் அவர்கள் கொரோனாவால் இறந்த வாலிபரின் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது உடலை அடக்கம் செய்ய கொண்டுவந்தவர்களுக்கும், எதிர்ப்பு தெரிவித்தவர்களுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. சிலர் கற்களை கையில் எடுத்துக்கொண்டு தாக்க முயன்றதாக கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து அவர்கள் உடலை அடக்கம் செய்ய முடியாமல் தவித்தனர். மேலும் அந்த பகுதியை சேர்ந்த ஏராளமானோர் சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சுப்புரத்தினம், மணிகண்டன், செல்வம் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், ‘இறந்தவரின் உடலை இங்கு அடக்கம் செய்தால் எங்களுக்கும் கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே இங்கு உடலை அடக்கம் செய்யக்கூடாது’ என்று தொடர்ந்து போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதற்கிடையே கொரோனாவால் உயிரிழந்த வாலிபரின் உடல், உறவினர்கள் முன்னிலையில் கல்லறை தோட்டத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. அதன் பின்னர் போலீசார், ‘கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்த வாலிபரின் உடல் போதிய பாதுகாப்பு வழிமுறைகள் கடைபிடித்து தான் அடக்கம் செய்யப்படுகிறது. இதனால், உங்கள் பகுதிக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது’ என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் எடுத்துக்கூறி சமரசம் செய்தனர். அதன் பின்னர் அவர்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் நேற்று பரபரப்பு ஏற்பட்டது.


Next Story