கோவையில் ஒரே நாளில் 6 பேர் கொரோனாவுக்கு பலி; பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியது


கோவையில் ஒரே நாளில் 6 பேர் கொரோனாவுக்கு பலி; பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியது
x
தினத்தந்தி 10 July 2020 4:00 AM GMT (Updated: 10 July 2020 4:00 AM GMT)

கோவை ஆஸ்பத்திரியில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற 6 பேர் நேற்று ஒரே நாளில் பலியானார்கள். மேலும், கோவை மாவட்டத்தில் தொற்று பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியது.

கோவை,

கோவை மாவட்டத்தில் கடந்த மாதம் 8-ந் தேதி கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 161 ஆகத்தான் இருந்தது. ஆனால் சென்னையிலிருந்து ரெயில் மற்றும் விமானங்கள் இயங்கத்தொடங்கியதும் கோவை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மளமள வென்று உயர்ந்தது.

அதன்படி கோவை மாவட்டத்தில் கடந்த மாதம் 28-ந் தேதி முதல் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை விவரம் வருமாறு:-

கடந்த மாதம் 28-ந் தேதி 460, 29-ந் தேதி 528, 30-ந் தேதி 538, 1-ந் தேதி 561, 2-ந் தேதி 608, 3-ந் தேதி 645, 4-ந் தேதி 712, 5-ந் தேதி 741, 6-ந் தேதி 802, 7-ந் தேதி 839, 8-ந் தேதி 941 ஆகவும் இருந்தது.

இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 85 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை ஆயிரத்து 26 ஆக உயர்ந்தது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாதிக்கப்பட்டவர்கள் உள்ள மாவட்டங்களின் பட்டியலில் கோவையும் இடம் பிடித்தது.

கோவையில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் பணியாற்ற பீகாரில் இருந்து வந்த வடமாநில தொழிலாளர்கள் 11 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 9 பேருக்கு தொற்று உறுதியானது. இதையடுத்து அவர்கள் அனைவரும் இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதேபோல் கோவையில் உள்ள ஒரு பிரபல நகைக்கடையில் வேலைபார்த்த 2 பேருக்கு கொரோனா தொற்று நேற்று உறுதியானது. அவர்களும் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

கோவை சுக்ரவார்பேட்டையில் ஏற்கனவே கொரோனா பாதிக்கப்பட்டவர்களுடன் நேரடி தொடர்பில் இருந்த 72 வயது முதியவர், 35, 25, 27 ஆண்கள் மற்றும் செல்வபுரம் சாவித்திரி நகரை சேர்ந்த 59, 49 வயது ஆண்கள், 30 வயது பெண், ராஜவீதியை சேர்ந்த 18 வயது ஆண்கள் 2 பேர், 25 வயது ஆண், எஸ்.எஸ்.குளம் வெங்கடேசா நகரை சேர்ந்த 26 வயது பெண், 4 வயது சிறுமி ஆகியோருக்கும் தொற்று உறுதியாகி உள்ளது.

கோவை காமராஜர் சாலையில் உள்ள ஹார்டுவேர் கடையை சேர்ந்த 72 வயது முதியவர்கள் 2 பேர், சுந்தராபுரத்தை சேர்ந்த 45, 32 வயது ஆண்கள், சவுரிபாளையத்தை சேர்ந்த 29 வயது ஆண், விநாயகபுரத்தை சேர்ந்த 60 வயது ஆண், குறிச்சி எல்.ஐ.சி. காலனியை சேர்ந்த 38 வயது பெண், சின்னியம்பாளையத்தை சேர்ந்த 29 வயது ஆண், கவுண்டம்பாளையத்தை சேர்ந்த 42 வயது ஆண் மற்றும் ஆர்.எஸ்.புரம், தெலுங்குபாளையம், வடவள்ளி, கொண்டையாம்பாளையம், கருமத்தம்பட்டி, சுகுணாபுரம், ஜி.என்.மில்ஸ் பகுதியை சேர்ந்த சிலருக்கும் கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இவர்களில் கொரோனா அறிகுறி இல்லாமல் உறுதி செய்யப்பட்டவர்கள் கொடிசியா கண்காணிப்பு மையத்திலும், அறிகுறி உள்ளவர்கள் கோவை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியிலும் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

கோவை வரதராஜபுரம் சக்கரை செட்டியார் வீதியை சேர்ந்த 43 வயது ஆண் ஒருவருக்கு கடந்த 2-ந் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் கோவை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனாலும் சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று காலை அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

கரூர் மாவட்டம் பள்ளப்பட்டி சுந்தராபுரம் பகுதியை சேர்ந்த 80 வயது முதியவர் கொரோனா பாதிப்புக்கு உள்ளானார். இதையடுத்து அவர் கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் அவரின் உடல் நிலை மிகவும் மோசமடைந்தது. இதைத்தொடர்ந்து அவர் மேல் சிகிச்சைக்காக இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரிக்கு நேற்று மாற்றப்பட்டார். ஆனால் அங்கு சென்ற சில நிமிடங்களில் அவர் பரிதாபமாக இறந்தார்.

இதேபோல் திருப்பூர் மாவட்டம் லட்சுமி நகர் பகுதியை சேர்ந்த 85 வயது ஆண் ஒருவருக்கு கடந்த 8-ந் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தொடர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

கோவை கணபதி பகுதியை சேர்ந்தவர் 75 வயது மூதாட்டி. இவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா உறுதியானதால் கடந்த 1-ந் தேதி கோவை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். நேற்று அவர் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதியைச் சேர்ந்த 55 வயது ஆண் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு கடந்த 7-ந் தேதி இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் அனுமதிக்களப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

கோவை சூலூர் கலங்கல் ரோடு ஸ்ரீ நகர் பகுதியை சேர்ந்த 58 வயது ஆண் ஒருவர் கொரோனா தொற்று ஏற்பட்டு கடந்த 1-ந் தேதி இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவர் ஏற்கனவே சர்க்கரை நோயால் அவதிப்பட்டு வந்தார். இதைத்தொடர்ந்து டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இருந்தபோதும் நேற்று இரவு இவர் சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக இறந்தார்.

கோவையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 6 பேர் ஒரே நாளில் பலியானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நேற்று பலியான 6 பேரில் 3 பேர் கோவையை சேர்ந்தவர்கள் என்பதால், கோவை மாவட்டத்தில் மட்டும் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்து உள்ளது.

கொரோனாவுக்கு இறந்த 6 பேரின் உடல்கள் பாதுகாப்பாக சுற்றப்பட்டு உறவினர்களிடம் காட்டப்பட்டது. உடல்களை தொட யாருக்கும் அனுமதி அளிக்கப்படவில்லை. பின்னர் அந்த 6 பேரின் உடல்களை ஊழியர்கள் பாதுகாப்பாக எடுத்துச்சென்று ஆத்துப்பாலம் மின் மயானத்தில் தகனம் செய்தனர். 

Next Story