மதுரையில் கொரோனாவுக்கு மேலும் 9 பேர் சாவு; 262 பேருக்கு நோய் தொற்று


மதுரையில் கொரோனாவுக்கு மேலும் 9 பேர் சாவு; 262 பேருக்கு நோய் தொற்று
x
தினத்தந்தி 10 July 2020 5:52 AM GMT (Updated: 10 July 2020 5:52 AM GMT)

மதுரையில் கொரோனாவுக்கு 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதுபோல் மேலும் 262 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது.

மதுரை,

மதுரை அரசு ஆஸ்பத்திரியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் மதுரையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற 9 பேர் திடீரென உயிரிழந்தனர். அவர்கள் மதுரையை சேர்ந்த 63 வயது ஆண், 66 வயது ஆண், 55 வயது பெண், 80 வயது ஆண், 76 வயது பெண் ஆகியோர் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தனர். இந்த நிலையில் இவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதுதவிர மதுரை பகுதியை சேர்ந்த 62 வயது ஆண், 66 வயது ஆண், 72 வயது ஆண், 63 வயது ஆண் ஆகியோர் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர்களும் பரிதாபமாக இறந்தனர். இதன்மூலம் நேற்றுடன் மதுரையில் கொரோனாவுக்கு இறந்தவர்களின் எண்ணிக்கை 95 ஆக உயர்ந்துள்ளது.

மதுரையில் நேற்று 262 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதில் 74 பேர் புறநகர் பகுதியை சேர்ந்தவர்கள், மீதமுள்ளவர்கள் நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள். நேற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் போலீஸ், டாக்டர்கள், மருத்துவமனை பணியாளர்கள், நர்சுகள், அரசு ஊழியர்கள் என 26 பேர் பாதிக்கப்பட்டனர். வெளி மாவட்டத்தை சேர்ந்த 3 பேரும், 7 கர்ப்பிணிகளுக்கும், ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து 135 பேருக்கும் என மொத்தம் 262 பேர் நேற்று பாதிக்கப்பட்டனர்.

இதுபோல் 140 பேருக்கு சளி, காய்ச்சல், இருமல், தொண்டை வலி உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தது. இதனை தொடர்ந்து அவர்களை அரசு மருத்துவமனையில் பரிசோதித்து பார்த்தபோது அவர்களுக்கு நோய் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது.

நேற்று கொரோனா உறுதிசெய்யப்பட்ட இவர்கள் மதுரை அரசு ஆஸ்பத்திரி மற்றும் தனியார் கல்லூரிகளில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு முகாம்களில் அனுமதிக்கப்பட்டனர். இதுபோல் சிலர் வீட்டு தனிமைப்படுத்துதலில் இருக்கிறார்கள்.

நேற்றுடன் மதுரையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,299 ஆக உயர்ந்துள்ளது.

Next Story