மதுரையில் கொரோனாவுக்கு 6 பேர் சாவு ; புதிதாக 192 பேருக்கு நோய் தொற்று


மதுரையில் கொரோனாவுக்கு 6 பேர் சாவு ; புதிதாக 192 பேருக்கு நோய் தொற்று
x
தினத்தந்தி 11 July 2020 5:28 AM GMT (Updated: 11 July 2020 5:28 AM GMT)

மதுரையில் கொரோனாவுக்கு 6 பேர் உயிரிழந்தனர். இதுபோல் நேற்று புதிதாக 192 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

மதுரை,

மதுரை அரசு ஆஸ்பத்திரியில் உள்ள சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இங்கு மதுரை மட்டுமின்றி மற்ற மாவட்டங்களை சேர்ந்தவர்களும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் மதுரையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற 6 பேர் உயிரிழந்தனர். அவர்கள் மதுரை பகுதியை சேர்ந்த 60 வயது ஆண், 75 வயது மூதாட்டி, 73 வயது முதியவர், 52 வயது ஆண் ஆகியோர் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தனர். இவர்களுக்கு கொரோனா பாதிப்புடன் சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் உள்ளிட்ட நோயின் பாதிப்பும் இருந்துள்ளது. இதனால், அவர்கள் உயிரிழந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

இதுபோல் 80 வயது மூதாட்டி, 56 வயது ஆண் ஆகியோர் கொரோனா பாதிக்கப்பட்டு மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இந்தநிலையில் அவர்களும் உயிரிழந்தனர். இதன் மூலம் மதுரையில் ஒரே நாளில் 6 பேர் உயிரிழந்தனர். மேலும், மதுரையில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 101 ஆக உயர்ந்துள்ளது.

மதுரையில் நேற்று 192 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதில் 149 பேர் நகர் பகுதியை சேர்ந்தவர்கள். மீதமுள்ள 43 புறநகர் பகுதியை சேர்ந்தவர்கள். கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களில் போலீஸ், டாக்டர்கள், மருத்துவமனை பணியாளர்கள், நர்சுகள், அரசு ஊழியர்கள் என 18 பேர் பாதிக்கப்பட்டனர்.

வெளி மாவட்டத்தை சேர்ந்த 2 பேரும், 7 கர்ப்பிணிகளுக்கும், 120 பேருக்கு சளி, காய்ச்சல், இருமல், தொண்டை வலி உள்ளிட்ட அறிகுறிகள் காணப்பட்டவர்கள் என மொத்தம் 192 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது.

நேற்று கொரோனா உறுதிசெய்யப்பட்ட இவர்கள் மதுரை அரசு ஆஸ்பத்திரி மற்றும் தனியார் கல்லூரிகளில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு முகாம்களில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

இது போல் சிலர் வீட்டு தனிமைப்படுத்துதலில் இருக்கிறார்கள். நேற்றுடன் மதுரையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,482 ஆக உயர்ந்துள்ளது.

இதுபோல் 1,250 பேர் குணமடைந்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

Next Story