திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் கொரோனாவுக்கு 6 பேர் பலி


திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் கொரோனாவுக்கு 6 பேர் பலி
x
தினத்தந்தி 11 July 2020 11:28 PM GMT (Updated: 11 July 2020 11:28 PM GMT)

திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் நேற்று ஒரேநாளில் 6 பேர் கொரோனாவுக்கு பலியாகினர்.

திண்டுக்கல்,

தமிழகத்தை மிரட்டி வரும் ஆட்கொல்லி வைரசான கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்திலும் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் அசுர வேகத்தில் பரவி வருகிறது. நாளொன்றுக்கு சாதாரணமாக 50-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

பாதிப்பு ஒருபுறம் இருந்தாலும், கொரோனாவுக்கு இறப்பவர்களின் எண்ணிக்கை மறுபுறம் உயர்ந்து கொண்டே போகிறது. அந்த வகையில் நேற்று முன்தினம் வரை மொத்தம் 27 பேர் பலியாகி இருந்தனர். இந்தநிலையில் நேற்று மேலும் 4 பேர் கொரோனாவுக்கு பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நிலக்கோட்டை தாலுகாவை சேர்ந்த 60 வயதான முதியவர்கள் 2 பேர், கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் அவதிப்பட்டனர். இதையடுத்து 2 பேரும் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க் கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. கொரோனா தொற்று உறுதியான நிலையில், நேற்று முதியவர்கள் 2 பேரும் சிகிச்சை பலனின்றி இறந்தனர்.

இதேபோல் திண்டுக்கல் நகரை சேர்ந்த 68 வயது முதியவர் மற்றும் நத்தத்தை சேர்ந்த 46 வயது ஆண் ஆகியோரும், கொரோனா தொற்றுக்கு உள்ளாகி திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். அவர்களும் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தனர். இதன்மூலம் திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 31 ஆக உயர்ந்தது.

இதற்கிடையே திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்ற மேலும் 3 பேர் நேற்று இறந்துவிட்டனர். முன்னதாக அவர்களிடம் இருந்து சளி, ரத்தம் மாதிரி சேகரித்து பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

அந்த பரிசோதனை முடிவு இன்று (ஞாயிற்றுக்கிழமை) தெரியவரும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அதன்பிறகே அவர்கள் சாதாரணமாக இறந்தார்களா? அல்லது கொரோனாவுக்கு இறந்தார்களா என்ற விவரம் தெரியவரும்.

இதேபோல் தேனி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஏற்கனவே 19 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், மேலும் 2 முதியவர்கள் நேற்று கொரோனாவுக்கு பலியாகினர். சின்னமனூர் ராஜா ரைஸ்மில் தெருவை சேர்ந்த 72 வயது முதியவர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருந்தார். இதையடுத்து அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், தொற்று இருப்பது உறுதியானது. பின்னர் அவர் சின்னமனூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்தநிலையில் அவர் சிகிச்சை பலனளிக்காமல் இறந்தார். மேலும் காமயகவுண்டன்பட்டியை சேர்ந்த 65 வயது முதியவர் மூச்சுத்திணறல் காரணமாக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு பரிசோதனை செய்ததில் கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இந்நிலையில் அவரும் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதன்மூலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்தது.

Next Story