தேனி மாவட்டத்தில் கொரோனாவுக்கு 2 பேர் பலி; டாக்டர் உள்பட 115 பேர் பாதிப்பு


தேனி மாவட்டத்தில் கொரோனாவுக்கு 2 பேர் பலி; டாக்டர் உள்பட 115 பேர் பாதிப்பு
x
தினத்தந்தி 13 July 2020 12:24 AM GMT (Updated: 13 July 2020 12:24 AM GMT)

தேனி மாவட்டத்தில் கொரோனாவுக்கு 2 பேர் பலியாகி உள்ளனர். டாக்டர் உள்பட 115 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தேனி,

தேனி மாவட்டத்தில் கொரோனா பாதிக்கப்பட்டு நேற்று முன்தினம் வரை 21 பேர் பலியாகி இருந்தனர். இந்நிலையில் கொரோனா பாதிக்கப்பட்டு தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளனர். அதில் ஒருவர் வத்தலக்குண்டு பகுதியை சேர்ந்த 58 வயது ஆண். மற்றொருவர் ஆண்டிப்பட்டி அருகே உள்ள டி.சுப்புலாபுரத்தை சேர்ந்த 68 வயது முதியவர். இதனால், மாவட்டத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது.

இதுபோல, தேனி அருகே பூதிப்புரத்தை சேர்ந்த 55 வயது பெண் காய்ச்சல் பாதிப்பு காரணமாக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்ட பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இந்தநிலையில் பரிசோதனை முடிவு வரும் முன்பே நேற்று அவர் உயிரிழந்தார். பரிசோதனை முடிவு வந்தால்தான் அவர் கொரோனா பாதிப்பால் இறந்தாரா? என்பது குறித்து தெரியவரும்.

இதுபோல தேனி மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 1,614 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருந்தது. இந்தநிலையில் நேற்று ஒரே நாளில் மேலும் 115 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. அதன்படி, கூடலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றும் பெண் டாக்டர், மருந்தாளுனர், கூடலூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் போலீஸ்காரர், கூடலூர் தெற்கு போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் கம்பத்தை சேர்ந்த போலீஸ்காரர், தேனி ஆயுதப்படை பிரிவில் பணியாற்றும் குள்ளப்பகவுண்டன்பட்டியை சேர்ந்த போலீஸ்காரர், தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை ஊழியர் ஆகியோருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.

பெரியகுளத்தில் 14 பேருக்கும், டி.கள்ளிப்பட்டி, சிலுக்குவார்பட்டி, ஜெயமங்கலம், முதலக்கம்பட்டி ஆகிய ஊர்களில் தலா ஒருவருக்கும், சில்லமரத்துப்பட்டி, போடி ஆகிய ஊர்களில் தலா 5 பேருக்கும், கூடலூரில் 8 பேருக்கும், கம்பத்தில் 28 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

காமயகவுண்டன்பட்டி, க.புதுப்பட்டி, கருநாக்கமுத்தன்பட்டி ஆகிய ஊர்களில் தலா 2 பேருக்கும், பூசாரிகவுண்டன்பட்டி, நாராயணத்தேவன்பட்டி ஆகிய ஊர்களில் தலா ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. தேனி அல்லிநகரம் நகராட்சி பகுதியில் 12 பேருக்கும், வீரபாண்டியில் 3 பேருக்கும், அரண்மனைப்புதூரில் 2 பேருக்கும், தப்புக்குண்டு, பழனிசெட்டிபட்டியில் தலா ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆண்டிப்பட்டி பகுதியில் 8 பேருக்கும், உத்தமபாளையத்தில் 5 பேருக்கும், சின்னமனூரில் 5 பேருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஒரே நாளில் 115 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,729 ஆக உயர்ந்து உள்ளது.


Next Story