வேதாரண்யம் அருகே, படகு கவிழ்ந்து கடலில் தத்தளித்த 4 மீனவர்கள் மீட்பு


வேதாரண்யம் அருகே, படகு கவிழ்ந்து கடலில் தத்தளித்த 4 மீனவர்கள் மீட்பு
x
தினத்தந்தி 13 July 2020 2:16 AM GMT (Updated: 13 July 2020 2:16 AM GMT)

வேதாரண்யம் அருகே படகு கவிழ்ந்து கடலில் தத்தளித்த 4 மீனவர்கள் மீட்கப்பட்டனர்.

வேதாரண்யம்,

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள ஆறுகாட்டுத்துறை மீனவர் கிராமத்தை சேர்ந்தவர் மாரியப்பன் மகன் மகேஷ். இவருக்கு சொந்தமான பைபர் படகில் அதே ஊரை சேர்ந்த பாலமுருகன் (வயது30), ராமச்சந்திரன் (30), சகிலன் (45), பாக்கியராஜ் (35) ஆகிய 4 பேரும் நேற்று முன்தினம் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

இவர்கள் 4 பேரும் மீன்பிடித்துக்கொண்டு நேற்று அதிகாலை கரைக்கு திரும்பி கொண்டிருந்தனர். ஆறுகாட்டுத்துறை கடல் பகுதியில் இருந்து சிறிது தொலைவில் வந்து கொண்டிருந்தபோது, எதிரே காரைக்காலை சேர்ந்த விசைப்படகின் வலை கயிற்றில் இவர்கள் வந்த படகு சிக்கி கவிழ்ந்தது.

இதனால் 4 பேரும் கடலில் விழுந்து தத்தளித்தனர். இதை பார்த்த காரைக்கால் மீனவர்கள் உடனடியாக 4 பேரையும் மீட்டனர். பின்னர் படகையும், வலைகளையும் மீட்டுக்கொடுத்தனர். இதுதொடர்பாக காரைக்கால் மீனவர்கள் ஆறுகாட்டுத்துறை மீனவர் கிராமத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து மீனவ பஞ்சாயத்தார்கள் ஏற்பாட்டில் மீனவர்கள் சிலர் 2 படகுகளில் சென்று பாதிக்கப்பட்ட மீனவர்களையும், அவர்களுடைய படகையும் கரைக்கு அழைத்து வந்தனர்.

Next Story