கோவையில் மூதாட்டி உள்பட 2 பேர் கொரோனாவுக்கு பலி


கோவையில் மூதாட்டி உள்பட 2 பேர் கொரோனாவுக்கு பலி
x
தினத்தந்தி 14 July 2020 3:15 AM GMT (Updated: 14 July 2020 3:15 AM GMT)

கோவையில் கொரோனாவுக்கு மூதாட்டி உள்பட 2 பேர் பலியானார்கள்.

கோவை,

கோவை-தடாகம் சாலை கோவில்மேடு பகுதியை சேர்ந்த 73 வயது மூதாட்டி ஒருவர் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி கடந்த மாதம் 30-ந் தேதி கோவை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரின் உடல்நிலை மிகவும் மோசம் அடைந்ததால் அவரை தீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்து கடந்த 13 நாட்களுக்கும் மேலாக டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர்.

இருப்பினும் அவருடைய உடல் நிலையில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. இந்த நிலையில் நேற்று காலை 10 மணியளவில் அவர் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இதையடுத்து அவருடைய உடல் பாதுகாப்பாக சுற்றப்பட்டு உறவினர்களிடம் காண்பிக்கப்பட்டது. பின்னர் அவருடைய உடல் ஆம்புலன்சில் எடுத்துச் செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டது.

இதேபோல் கோவை புலியகுளம் மீனா எஸ்டேட் பகுதியை சேர்ந்த 47 வயது ஆண் ஒருவர் கடந்த 15 நாட்களுக்கு முன்பு கொரோனாவால் பாதிக்கப்பட்டார். தொடர்ந்து அவருக்கு கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதைத் தொடர்ந்து அவருடைய உடல் பாதுகாப்பாக சுற்றப்பட்டு கோவையில் அடக்கம் செய்யப்பட்டது. இதன் மூலம் கோவை மாவட்டத்தில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்து உள்ளது. 

Next Story