திருப்பூர் ராயபுரம் ரெயில்வே தரைப்பாலத்தை மூழ்கடித்து பாய்ந்த கழிவுநீர் வாகன ஓட்டிகள் அவதி


திருப்பூர் ராயபுரம் ரெயில்வே தரைப்பாலத்தை மூழ்கடித்து பாய்ந்த கழிவுநீர் வாகன ஓட்டிகள் அவதி
x
தினத்தந்தி 15 July 2020 11:52 PM GMT (Updated: 15 July 2020 11:52 PM GMT)

திருப்பூர் ராயபுரத்தில் உள்ள ரெயில்வே தரை பாலத்தை மூழ்கடித்து ஆறுபோல் ஓடிய சாக்கடை கழிவுநீரால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.

திருப்பூர்,

திருப்பூர் ராயபுரம் மற்றும் கல்லம்பாளையம் பகுதியிலிருந்து காலேஜ் ரோடு செல்வதற்காக ரெயில்வே தரைப்பாலம் ஒன்று உள்ளது. மாநகரின் முக்கிய பகுதியில் உள்ள இந்த தரைப்பாலத்தில் தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருவது வழக்கம். இந்த தரைப் பாலத்தின் பக்கவாட்டில் சிறிய கழிவுநீர் கால்வாய் ஒன்று உள்ளது. காலேஜ் ரோடு, மாஸ்கோ நகர், அய்யப்பன் கோவில் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள குடியிருப்புக்கள், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் இந்த கால்வாய் வழியாக சென்று ராயபுரம் பகுதியில் உள்ள நொய்யல் ஆற்றில் கலக்கும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

பலத்த மழை பெய்யும் காலங்களில் தரைப்பாலத்தில் உள்ள சிறிய கழிவுநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு பாலத்தை வெள்ளநீர் சூழ்ந்து போக்குவரத்து தடையை ஏற்படுத்தும். இந்த நிலையில் நேற்று அதிகாலை நேரத்தில் இந்த சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டதால் கழிவுநீர் தரைப்பாலம் முழுவதும் வெள்ளம் போல் பாய்ந்து சென்றது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து தடை ஏற்பட்டது

வாகன ஓட்டிகள் அவதி

மேலும், வாகன ஓட்டிகளும் அந்த வழியாக செல்ல முடியாமல் அவதி அடைந்தனர். அதிகாலை 5 மணி முதல் காலை 7 மணி வரை வெள்ளம் போல் பாய்ந்து சென்ற கழிவுநீரால் அப்பகுதியில் கடும் துர்நாற்றமும் வீசியது. கழிவுநீர் கால்வாயில் குப்பைகள், பிளாஸ்டிக் கழிவுகள் அதிக அளவு சேர்ந்து அடைப்பை ஏற்படுத்தியதால் கழிவுநீர் செல்ல வழியின்றி தரைப்பாலம் முழுவதும் பாய்ந்ததாக அப்பகுதியினர் தெரிவித்தனர். மேலும், இந்த தரைப் பாலத்தை சீரமைத்து அங்குள்ள சாக்கடை கால்வாயை தூர்வாரி அகலப்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். 

Next Story