தமிழ்ப்பல்கலைக்கழகம் சார்பில் ரூ.3 கோடியில் யோகா வளாகம் விரைவில் பயன்பாட்டுக்கு வருகிறது


தமிழ்ப்பல்கலைக்கழகம் சார்பில் ரூ.3 கோடியில் யோகா வளாகம் விரைவில் பயன்பாட்டுக்கு வருகிறது
x
தினத்தந்தி 16 July 2020 3:58 AM GMT (Updated: 16 July 2020 3:58 AM GMT)

தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகம் சார்பில் மருத்துவக்கல்லூரி-வல்லம் சாலையில் ரூ.3 கோடியே 77 லட்சம் மதிப்பில் யோகா வளாகம் கட்டப்படுகிறது. விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வரும் வகையில் கட்டுமான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

பிள்ளையார்பட்டி,

தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழக மெய்யியல் துறை சார்பில் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்காக பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள கரிகால் சோழன் கலைஅரங்கில் தற்போது யோகா பயிற்சிகள் நடந்து வருகிறது.

இங்கு வந்து செல்ல பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமத்தை கருத்தில் கொண்டும், பொதுமக்கள் யோகா பயிற்சிக்கு எளிதில் வந்து செல்ல ஏதுவாகவும் மருத்துவக்கல்லூரி-வல்லம் ரோட்டில் உள்ள தமிழ் பல்கலைக்கழகத்திற்கு சொந்தமான இடத்தில் யோகா வளாகம் கட்ட முடிவெடுக்கப்பட்டதாக பல்கலைக்கழக துணைவேந்தர் பாலசுப்ரமணியம் தெரிவித்தார்.

ரூ.3¾ கோடியில் அமைகிறது

ரூ.3 கோடியே 77 லட்சம் மதிப்பில் இந்த யோகா வளாகம் கட்டப்பட உள்ளது. இதில் ரூ.1 கோடியே 97 லட்சம் மதிப்பில் ஒரே நேரத்தில் 150 பேர் நல்ல விசாலமாக பயிற்சி பெறும் வகையில் 821.91 சதுர மீட்டர் பரப்பளவில் யோகா பயிற்சி கூடம் அமைகிறது.

இந்த யோகா வளாகத்தை சுற்றிலும் சுற்றுச்சுவர் அமைக்கும் பணி மற்றும் நடை பயிற்சிக்கான தளம் அமைக்கும் பணி ஆகியவற்றுடன் ஏற்கனவே அங்கு உள்ள பல்கலைக்கழக ஆய்வு மாணவர்கள் தங்கும் 5 குடில்கள் பராமரிக்கும் பணி ஆகியவை ரூ.1 கோடியே 80 லட்சம் செலவில் மேற்கொள்ளப்பட உள்ளது.

சுற்றுச்சுவரில் யோகா ஓவியங்கள்

இந்த நடைபயிற்சிக்கான நடைபாதை முழுவதும் ‘பேவர்பிளாக்’ கற்கள் கொண்டு அமைக்கப்படுகிறது. மேலும் யோகா வளாக சுற்றுச்சுவர் முழுவதிலும் யோக கலையை அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் பல்வேறு ஆசனங்கள் வண்ண ஓவியங்களுடனும், விளக்க படங்களுடனும் இடம்பெற உள்ளது.

ஒருங்கிணைந்த உயர்கல்வி திட்டத்தின்(ரூசா) கீழ் தமிழக அரசு மற்றும் மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறையின் நிதியில் இருந்து இந்த யோகா வளாகம் கட்டப்பட உள்ளது. இதற்கான அடிப்படை கட்டுமான பணிகள் தற்போது தீவிரமாக நடந்து வருகிறது.

விரைவில் பயன்பாட்டுக்கு வருகிறது

யோகா வளாக கூடம், சுற்றுச்சுவர் அமைக்கும் பணி, நடைபயிற்சிக்கான நடைபாதை அமைக்கும் பணி உள்பட அனைத்து பணிகளையும் முடித்து விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வரும் வகையில் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தமிழ்ப்பல்கலைக்கழகத்திற்கும், பொதுமக்களுக்கும் இடையே நல்ல உறவை ஏற்படுத்தும் வகையில் ஒரு இணைப்பு பாலமாக இந்த யோகா வளாகம் உருவாகி வருகிறது என்று தெரிவித்த தஞ்சை மாநகர பொதுமக்கள், முன்பு பராமரிப்பின்றி இருந்து வந்த இடம் யோகா வளாகமாக மாறுவதால் இதற்கான நடவடிக்கை மேற்கொண்ட பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு பாராட்டு தெரிவித்துள்ளனர். 

Next Story