தஞ்சை மாவட்டத்தில் அதிகபட்சமாக ஒரேநாளில் 77 பேருக்கு கொரோனா


தஞ்சை மாவட்டத்தில் அதிகபட்சமாக ஒரேநாளில் 77 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 16 July 2020 4:01 AM GMT (Updated: 16 July 2020 4:01 AM GMT)

தஞ்சை மாவட்டத்தில் தாராசுரம் மார்க்கெட் தொடர்புடைய 45 பேர் உள்பட 77 பேருக்கு ஒரே நாளில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும் விபத்தில் காயம் அடைந்த வாலிபர் கொரோனா தொற்றுக்கு பலியானார்.

தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை இல்லாத அளவுக்கு நேற்று ஒரே நாளில் அதிகபட்சமாக மேலும் 77 பேருக்கு தொற்று உறுதியானது. இதில் கும்பகோணம் பகுதியை சேர்ந்தவர்கள் மட்டும் 67 பேர் ஆவர். தஞ்சை பகுதியை சேர்ந்த 8 பேரும், பட்டுக்கோட்டை, திருவையாறு பகுதியை சேர்ந்த தலா ஒருவரும் அடங்குவர்.

கும்பகோணத்தை அடுத்த தாராசுரம் மார்க்கெட் பகுதியை சேர்ந்த வியாபாரிகள் 3 பேருக்கு கடந்த வாரம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அங்குள்ள வியாபாரிகள் மற்றும் அவர்களோடு தொடர்புடையவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இதில் நேற்று வரையில் 45 பேருக்கு கொரோனா உறுதி செய்யப் பட்டது. மேலும் தாராசுரத்தை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டதையடுத்து அவரின் குடும்பத்தை சேர்ந்த 7 பேருக்கும் கொரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டது.

809 ஆக அதிகரிப்பு

கும்பகோணத்தை சேர்ந்த கொரோனாவுக்கு பலியான முதியவரின் குடும்பத்தை சேர்ந்த 5 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தஞ்சையில் தனியார் மருத்துவமனை ஊழியர்கள் 4 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தஞ்சை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 809 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனாவால் பாதிக்கப் பட்டு தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் வல்லத்தில் உள்ள கொரோனா சிகிச்சை மையத்தில் சிகிச்சை பெற்று வந்த 17 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். இதன் மூலம் மாவட்டத்தில் இதுவரை 439 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

வாலிபர் பலி

இந்த நிலையில் விபத்தில் தலையில் காயம் அடைந்த திருவிடைமருதூர் பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக் காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட் டதில் தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில் அவர் நேற்று இறந்தார். இதன் மூலம் தஞ்சை மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பலியானோர் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது.

Next Story