தேனி மாவட்டத்தில் புதிய உச்சத்தை தொட்டது: ஒரே நாளில் 187 பேருக்கு கொரோனா மூதாட்டி உள்பட 5 பேர் பலி


தேனி மாவட்டத்தில் புதிய உச்சத்தை தொட்டது: ஒரே நாளில் 187 பேருக்கு கொரோனா மூதாட்டி உள்பட 5 பேர் பலி
x
தினத்தந்தி 18 July 2020 1:41 AM GMT (Updated: 18 July 2020 1:41 AM GMT)

தேனி மாவட்டத்தில் நேற்று டாக்டர் உள்பட ஒரே நாளில் 187 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. மூதாட்டி உள்பட 5 பேர் பலியானார்கள்.

தேனி,

தேனி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. நேற்று முன்தினம் வரை மாவட்டத்தில் 2 ஆயிரத்து 115 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி இருந்தது. பாதிக்கப்பட்டவர்களில் 37 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இந்நிலையில் தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரோனா பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதில், அரண்மனைப்புதூரை சேர்ந்த 90 வயது முதியவர் நேற்று முன்தினம் இரவில் உயிரிழந்தார். தேனி சுப்பன்தெருவை சேர்ந்த 70 வயது மூதாட்டி, உத்தமபாளையம் பெரிய பள்ளிவாசல் தெருவை சேர்ந்த 74 வயது முதியவர், கம்பத்தை சேர்ந்த 70 வயது முதியவர், ஆண்டிப்பட்டி பாப்பம்மாள்புரத்தை சேர்ந்த 68 வயது முதியவர் ஆகிய 4 பேர் நேற்று அடுத்தடுத்து உயிரிழந்தனர். இதனால் மாவட்டத்தில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 42 ஆக அதிகரித்துள்ளது.

187 பேருக்கு பாதிப்பு

அதுபோல் கம்பத்தை சேர்ந்த டாக்டர், தேனி மாவட்ட கலெக்டரின் நேர்முக எழுத்தர், சின்னமனூர் நகராட்சி ஊழியர், அல்லிநகரம், தென்கரை, தேனி போலீஸ் நிலையங்களில் பணியாற்றும் 6 போலீஸ்காரர்கள், கம்பம் தனியார் வங்கி ஊழியர்கள் 3 பேர் உள்பட ஒரே நாளில் 187 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மாவட்டத்தில் இதுவரை ஏற்பட்ட பாதிப்புகளில் நேற்றைய பாதிப்பு புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

ஒன்றியம் வாரியாக தேனியில் 24 பேர், பெரியகுளத்தில் 57 பேர், போடியில் 32 பேர், சின்னமனூரில் 15 பேர், உத்தமபாளையத்தில் 17 பேர், கம்பத்தில் 37 பேர், ஆண்டிப்பட்டியில் 4 பேர், கடமலை-மயிலையில் ஒருவர் ஆகியோருக்கு பாதிப்பு உறுதியாகி உள்ளது. ஒரே நாளில் 187 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், மாவட்டத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2 ஆயிரத்து 302 ஆக அதிகரித்துள்ளது.

Next Story