கோவையில் ஓய்வு பெற்ற ஆசிரியர் உள்பட 6 பேர் கொரோனாவுக்கு பலி


கோவையில் ஓய்வு பெற்ற ஆசிரியர் உள்பட 6 பேர் கொரோனாவுக்கு பலி
x
தினத்தந்தி 18 July 2020 3:42 AM GMT (Updated: 18 July 2020 3:42 AM GMT)

கோவையில் ஓய்வு பெற்ற ஆசிரியர் உள்பட 6 பேர் கொரோனாவுக்கு பலியானார்கள்.

கோவை,

நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே கடநாடு கிராமத்தை சேர்ந்த 90 வயது ஓய்வு பெற்ற அரசு பள்ளி ஆசிரியர் ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த பகுதியில் நடந்த திருமண நிகழ்ச்சிக்கு சென்று வந்துள்ளார். அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஏராளமானவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானது.

இதைத்தொடர்ந்து இவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியானது. இதையடுத்து அவர் நேற்று முன்தினம் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று காலை அவர் பரிதாபமாக இறந்தார். இவருடைய வீட்டில் குடும்பத்தினர் 4 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. ஓய்வு பெற்ற ஆசிரியர் இறந்ததால் நீலகிரி மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8-ஆக உயர்ந்து உள்ளது.

தூய்மை பணியாளர்

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே கொண்டம்பட்டி பகுதியை சேர்ந்த 49 வயதுடைய ஒருவர் ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணியாளராக பணியாற்றி வந்தார். இவர் கடந்த வாரம் திடீரென மயங்கி கீழே விழுந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் பரிசோதனை செய்ததில் உயர் ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

அத்துடன் அவருக்கு கொரோனா பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது. அதன் முடிவு வருவதற்கு முன்பே நேற்று முன்தினம் அவர் பரிதாபமாக இறந்தார். பின்னர் அவருக்கு எடுக்கப்பட்ட பரிசோதனை முடிவில் கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர் வசித்த வீடு மற்றும் அந்த பகுதியில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. அத்துடன் அவருடைய குடும்பத்தினர் மற்றும் அவருடன் பணியாற்றியவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

84 வயது முதியவர்

கோவை தெலுங்கு பிராமணர் வீதியை சேர்ந்த 84 வயது முதியவர் கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வந்தார். நேற்று முன்தினம் உறவினர்கள் அவரை சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். காய்ச்சல் பாதிப்பு இருந்தாலும், சந்தேக மரணம் என்பதாலும் அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதன் முடிவில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. தொடர்ந்து அவருடைய உறவினர்கள், அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஆகியோர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.

செட்டி வீதியை சேர்ந்த 56 வயது பெண் ஒருவர் கொரோனா அறிகுறிகளுடன் கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா உறுதியானது. அவரை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரிக்கு அனுப்ப முடிவு செய்தனர். இதற்கிடையே நேற்று முன்தினம் அவர் திடீரென இறந்தார்.

60 வயது மூதாட்டி

துடியலூர் பகுதியை சேர்ந்த 60 வயது மூதாட்டி ஒருவர் கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டு கடந்த 15-ந் தேதி கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தார். அங்கு அவரின் சளி மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. அதன் முடிவு நேற்று முன்தினம் வெளியானது. அதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதற்கிடையே அவர் உயிரிழந்தார். இதன்மூலம் கோவையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட உயிரிழந்தோரின் எண்ணிக்கை 27-ஆக உயர்ந்து உள்ளது.

கரூர் மாவட்டம் பள்ளப்பட்டி பகுதியை சேர்ந்த 59 வயது ஆண் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு கடந்த 9-ந் தேதி சிகிச்சைக்காக இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

Next Story