ராமநாதபுரம், சிவகங்கையில் 73 பேருக்கு கொரோனா; 2 பெண்கள் பலி


ராமநாதபுரம், சிவகங்கையில் 73 பேருக்கு கொரோனா; 2 பெண்கள் பலி
x
தினத்தந்தி 18 July 2020 5:19 AM GMT (Updated: 18 July 2020 5:19 AM GMT)

ராமநாதபுரம்,சிவகங்கை மாவட்டத்தில் நேற்று 73 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 2 பெண்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,166 ஆக இருந்தது. இந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் 32 பெண்கள் உள்பட மொத்தம் 64 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,230 ஆக உயர்ந்துள்ளது.

நோய்த்தொற்று கண்டறியப்பட்டவர்கள் வசிக்கும் பகுதிகளில் நோய் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் மாவட்ட நிர்வாகத்தால் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதிகளவில் பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ராமநாதபுரம் வெளிப்பட்டணத்தை சேர்ந்த 52 வயது பெண் ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். சிவகங்கை மாவட்டத்தில் நேற்று 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிவகங்கை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த பாகனேரியை சேர்ந்த 58 வயது பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.

Next Story