கடையம் அருகே, வனத்துறை விசாரணைக்கு சென்ற விவசாயி சாவு: உடலை வாங்க மறுத்து 2-வது நாளாக உறவினர்கள் போராட்டம்


கடையம் அருகே, வனத்துறை விசாரணைக்கு சென்ற விவசாயி சாவு: உடலை வாங்க மறுத்து 2-வது நாளாக உறவினர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 25 July 2020 4:45 AM IST (Updated: 25 July 2020 1:06 AM IST)
t-max-icont-min-icon

கடையம் அருகே வனத்துறையினர் விசாரணைக்கு அழைத்து சென்றபோது இறந்த விவசாயியின் உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்கள் 2-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடையம்,

தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள ஆழ்வார்குறிச்சி வாகைகுளத்தை சேர்ந்தவர் அணைக்கரை முத்து (வயது 72). விவசாயி. இவர் தனது வீட்டு அருகே உள்ள தோட்டத்தில் மின்வேலி அமைத்து இருந்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து கடையம் வனத்துறையினர் அவரை விசாரணைக்கு அழைத்து சென்றனர். அப்போது அணைக்கரை முத்துவுக்கு திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. உடனே அவரை தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவர் வழியிலேயே பரிதாபமாக இறந்தார்.

இதை அறிந்த அவரது உறவினர்கள் ஆழ்வார்குறிச்சி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படவில்லை. இதற்கிடையே, அணைக்கரை முத்துவின் உடல் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

ஆனால், அவரது உடலை வாங்க மறுத்த உறவினர்கள் நேற்று 2-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் வாகைகுளத்தில் உள்ள அணைக்கரை முத்துவின் வீட்டு முன்பு தர்ணாவில் ஈடுபட்டனர். அவர்களுக்கு ஆதரவாக, தமிழக மக்கள் முன்னேற்ற கழக மாநில துணை பொதுச்செயலாளர் நெல்லையப்பன், தெற்கு மாவட்ட செயலாளர் மகேஷ்மல்லர், விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றிய செயலாளர் ஆதித்தமிழன் அன்பழகன் உள்பட பல்வேறு கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகளும் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

அவர்களிடம் மாவட்ட உதவி கலெக்டர் (பொறுப்பு) ஷேக் அப்துல்காதர், தென்காசி தாசில்தார் சுப்பையன், வருவாய் ஆய்வாளர் பாலமுருகன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போராட்டக்காரர்கள், வனத்துறையினர் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும், இறந்தவர் குடும்பத்துக்கு ரூ.50 லட்சமும், அவருடைய மகன்களுக்கு தகுதியின் அடிப்படையில் அரசு வேலையும் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

ஆனால், பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் போராட்டம் இரவு வரை நீடித்தது. இந்த போராட்டம் காரணமாக அந்த பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.
1 More update

Next Story