கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு கும்மிடிப்பூண்டியில் குடியிருப்புகளில் தடுப்பு அமைக்க பெண்கள் எதிர்ப்பு


கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு கும்மிடிப்பூண்டியில் குடியிருப்புகளில் தடுப்பு அமைக்க பெண்கள் எதிர்ப்பு
x
தினத்தந்தி 26 July 2020 11:44 PM GMT (Updated: 26 July 2020 11:44 PM GMT)

கும்மிடிப்பூண்டியில் குடியிருப்பு பகுதியில் கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு தனிமைப்படுத்துதலுக்கான தடுப்பு அமைக்கும் பணிக்கு பெண்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதன் காரணமாக அதிகாரிகளுடன் அவர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

கும்மிடிப்பூண்டி,

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட முஸ்லிம் காலனியில் வசித்து வரும் சிலருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதால், அப்பகுதியில் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் கம்புகளால் தடுப்பு அமைக்கும் பணி நேற்று நடைபெற்றது.

இதனைக்கண்ட அப்பகுதியில் குடியிருக்கும் பெண்கள் சிலர், தடுப்பு அமைப்பதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். கொரோனா தொற்று என்று கூறி குடியிருப்பு பகுதியை தடுப்பு வைத்து மூடுவதால் பல்வேறு வகையில் பாதிப்பு ஏற்படுவதாக குற்றம் சாட்டினர்.

கொரோனா பாதித்தவர்களை சிகிச்சைக்காக அழைத்து செல்லும் அதிகாரிகள், சிகிச்சை முடிந்து முறையாக வீட்டிற்கு கொண்டு வந்து விடுவதில்லை என்றும், பாதிக்கப்பட்ட இடங்களில் பேரூராட்சி நிர்வாகம் கிருமி நாசினி தெளிப்பது இல்லை என்றும் புகார் கூறினர்.

போலீசார் பேச்சுவார்த்தை

மேலும், கொரோனா பரவல் காரணமாக அமைக்கப்படும் தடுப்புகளை அகற்றிய பிறகும் கடைகளில் பொருட்களை வாங்க கூட அனுமதிப்பது இல்லை என்பதால் குடியிருப்பு பகுதியில் தனிமைப்படுத்தும் தடுப்பு அமைத்திட கூடாது என பெண்கள் அதிகாரிகளுடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது.

இதனையடுத்து அப்பகுதி மக்களிடம் அதிகாரிகளும், போலீசாரும் பேச்சு வார்த்தை நடத்தினர். பிரச்சினைகளுக்கு தீர்வு காண உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர்.

இந்த நிலையில், சுமார் 1 மணி நேர போராட்டத்திற்கு பிறகு போலீஸ் பாதுகாப்புடன் மேற்கண்ட குடியிருப்பு பகுதியை தனிமைப்படுத்துவதற்கான தடுப்புகளை பேரூராட்சி நிர்வாகத்தினர் அமைத்தனர்.

Next Story