போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரின் மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி சாவு கொலை வழக்கு பதியக்கோரி உறவினர்கள் சாலை மறியல்


போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரின் மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி சாவு கொலை வழக்கு பதியக்கோரி உறவினர்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 27 July 2020 11:17 PM GMT (Updated: 27 July 2020 11:17 PM GMT)

பாளையங்கோட்டை அருகே சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரின் மோட்டார் சைக்கிள் மோதியதில் தொழிலாளி பரிதாபமாக இறந்தார். இதுதொடர்பாக கொலை வழக்கு பதிவு செய்யக்கோரி அவரது உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நெல்லை,

பாளையங்கோட்டையை அடுத்த கீழ நத்தம் தெற்கூர் தங்கம்மன் கோவில் மேற்கு தெருவை சேர்ந்தவர் சீனி மகன் சண்முகம் (வயது 35). சுமை தூக்கும் தொழிலாளி. இவர் கடந்த 25-ந்தேதி பாளையங்கோட்டை சீவலப்பேரி கிருபா நகர் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது நெல்லை மாநகர போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அய்யப்பன் பணியை முடித்துக்கொண்டு, அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்தார். எதிர்பாராதவிதமாக அந்த மோட்டார் சைக்கிள் சண்முகம் மீது மோதியது. இதில் சண்முகம், அய்யப்பன் ஆகிய 2 பேரும் காயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.

பரிதாப சாவு

இந்த நிலையில் சண்முகம் சிகிச்சை பலனின்றி நேற்று காலை பரிதாபமாக இறந்தார். இதை அறிந்த அவரது உறவினர்கள் மற்றும் ஊர் மக்கள் ஆஸ்பத்திரிக்கு வந்தனர். அவர்கள், பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரி முன்பு திடீரென்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்த கூடுதல் போலீஸ் துணை கமிஷனர் வெள்ளத்துரை தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போராட்டக்காரர்கள், “சண்முகம் மீது மோட்டார் சைக்கிளை மோதிய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும். பலியான சண்முகம் குடும்பத்துக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும். எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை உடலை வாங்க மாட்டோம்” என்று தெரிவித்தனர்.

30 பேர் கைது

ஆனால், பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. இதையடுத்து மறியலில் ஈடுபட்ட சுமார் 30 பேரை போலீசார் கைது செய்து அங்குள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

இந்த விபத்து குறித்து நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரின் மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி இறந்ததை தொடர்ந்து கொலை வழக்கு பதிவு செய்யக்கோரி உறவினர்கள் போராட்டம் நடத்திய சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story