ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 357 பேருக்கு கொரோனா: பாதிப்பு எண்ணிக்கை 13,654 ஆக அதிகரிப்பு


ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 357 பேருக்கு கொரோனா: பாதிப்பு எண்ணிக்கை 13,654 ஆக அதிகரிப்பு
x
தினத்தந்தி 3 Aug 2020 11:45 PM GMT (Updated: 3 Aug 2020 8:08 PM GMT)

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 357 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதன் மூலம் தொற்று பாதிப்பு எண்ணிக்கை 13,654 ஆக உயர்ந்தது.

வேலூர்,

வேலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தினமும் அதிகரித்து வருகிறது. தொற்றை தடுக்கும் நடவடிக்கையாக பல்வேறு இடங்களில் மருத்துவ பரிசோதனை முகாம், பொதுமக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கபசுர குடிநீர், நிலவேம்பு கசாயம், சித்த மருத்துவ பெட்டகம் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் கொரோனாவினால் தினமும் 100-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். வேலூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 171 பேருக்கு தொற்று உறுதியானது. அதில், 59 பேர் மாநகராட்சி பகுதியை சேர்ந்தவர்கள் ஆவர்.

வேலூர் மாநகராட்சி பகுதியில் உள்ள காய்கறி, மளிகைக்கடை வியாபாரிகள், துணிக்கடை ஊழியர்களுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. அதில், கொரோனா அறிகுறி காணப்பட்ட நபர்களுக்கு சளிமாதிரி சேகரிக்கப்பட்டன. இந்த நிலையில் சிலரின் பரிசோதனை முடிவுகள் நேற்று வந்தன. அதில், துணிக்கடை உரிமையாளர், 3 வியாபாரிகளுக்கு தொற்று உறுதியானது.

வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணிபுரியும் டாக்டர், நர்சு, ஊழியர்கள் உள்பட 7 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது நேற்று தெரியவந்தது. அதையடுத்து அவர்கள் அதே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். ஏற்கனவே கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட தனியார் மருத்துவமனை ஊழியர்களின் குடும்பத்தினர், உறவினர்கள் 5 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டனர்.

அதைத்தவிர வேலூர் விருபாட்சிபுரத்தில் 5 வயது ஆண் குழந்தை, சைதாப்பேட்டையில் 8 வயது பெண் குழந்தை, பாகாயத்தில் 9 வயது ஆண் குழந்தை உள்பட மாவட்டம் முழுவதும் 171 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் தனியார், அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். வேலூர் மாவட்டத்தில் இதுவரை 6,441 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 142 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,935 ஆக உயர்ந்துள்ளது. இதில் 1,846 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மாவட்டத்தில் இதுவரை 36 ஆயிரத்து 80 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, அதில் 3,354 பேருக்கு பரிசோதனை முடிவுகள் வரவேண்டி உள்ளது. மாவட்டத்தில் 1,802 பேர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் புதிதாக 44 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பாதிப்பு எண்ணிக்கை 1,278 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் நேற்று 47 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதுவரை 31 ஆயிரத்து 620 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

Next Story