கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு 1½ லட்சத்தை நெருங்கியது 110 பேர் மரணம்


கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு 1½ லட்சத்தை நெருங்கியது 110 பேர் மரணம்
x
தினத்தந்தி 4 Aug 2020 7:47 PM GMT (Updated: 4 Aug 2020 7:47 PM GMT)

கர்நாடகத்தில் புதிய உச்சமாக ஒரே நாளில் 6,259 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 1½ லட்சத்தை நெருங்கி உள்ளது. மேலும் கொரோனாவுக்கு 110 பேர் பலியாகி உள்ளனர்.

பெங்களூரு,

கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் பரவுவது தொடர்ந்து அதிகரித்து கொண்டே சென்ற வண்ணம் உள்ளது. முதல்-மந்திரி எடியூரப்பா, எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில், கர்நாடகத்தில் நேற்று கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. கர்நாடகத்தில் நேற்று முன்தினம் வரை 1 லட்சத்து 39 ஆயிரத்து 571 பேர் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகி இருந்தனர். மேலும் நேற்று முன்தினம் வரை கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி 2 ஆயிரத்து 602 பேர் பலியாகி இருந்தனர்.

இந்த நிலையில், கர்நாடகத்தில் நேற்று ஒரே நாளில் கொரோனாவுக்கு 110 பேர் பலியாகி உள்ளனர். கர்நாடகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

6,259 பேருக்கு பாதிப்பு

கர்நாடகத்தில் ஏற்கனவே 1 லட்சத்து 39 ஆயிரத்து 571 பேர் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி இருந்தனர். இந்த நிலையில், நேற்று ஒரே நாளில் புதிதாக 6,259 பேர் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். இதன் மூலம் மாநிலத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 45 ஆயிரத்து 830 ஆக உயர்ந்திருக்கிறது. இதுவரை கொரோனா பாதிப்பில் இருந்து 69 ஆயிரத்து 272 பேர் மீண்டுள்ளனர். இதில், நேற்று மட்டும் 6,777 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மாநிலம் முழுவதும் 73 ஆயிரத்து 846 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

புதிதாக பெங்களூரு நகரில் 2,035 பேருக்கும், மைசூருவில் 662 பேருக்கும், கலபுரகியில் 285 பேருக்கும், தார்வாரில் 188 பேருக்கும், பல்லாரியில் 284 பேருக்கும், கொப்பலில் 163 பேருக்கும், தட்சிணகன்னடாவில் 225 பேருக்கும், பாகல்கோட்டையில் 144 பேருக்கும், உடுப்பியில் 170 பேருக்கும், உத்தரகன்னடாவில் 57 பேருக்கும், பெலகாவியில் 263 பேருக்கும், விஜயாப்புராவில் 71 பேருக்கும், துமகூருவில் 78 பேருக்கும், மண்டியாவில் 126 பேருக்கும், ராய்ச்சூரில் 144 பேருக்கும், பீதரில் 114 பேருக்கும், தாவணகெரேயில் 191 பேருக்கும், பெங்களூரு புறநகரில் 82 பேருக்கும், சிக்கபள்ளாப்பூரில் 171 பேருக்கும், கோலாரில் 46 பேருக்கும், சிவமொக்காவில் 15 பேருக்கும், குடகில் 31 பேருக்கும், சித்ரதுர்காவில் 12 பேருக்கும், சாம்ராஜ்நகரில் 57 பேருக்கும், ஹாசனில் 188 பேருக்கும், சிக்கமகளூருவில் 63 பேருக்கும், யாதகிரியில் 76 பேருக்கும், ராமநகரில் 65 பேருக்கும், ஹாவேரியில் 157 பேருக்கும், கதக்கில் 96 பேருக்கும் வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது.

110 பேர் பலி

மேலும் கர்நாடகத்தில் நேற்று ஒரே நாளில் 110 பேர் கொரோனா தொற்றுக்கு பலியாகி உள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை 2,712 ஆக உயர்ந்துள்ளது. பெங்களூருவில் மட்டும் 30 பேரும், தார்வாரில் 8 பேரும், மைசூருவில் 9 பேரும், தட்சிண கன்னடாவில் 13 பேரும், உடுப்பியில் 6 பேரும், சிவமொக்காவில் 4 பேரும், பல்லாரி மற்றும் தாவணகெரேயில் தலா 5 பேரும், பீதர், சாம்ராஜ்நகர், சித்ரதுர்காவில் தலா 3 பேரும், கலபுரகி, ஹாசன், சிக்கபள்ளாப்பூர், ராய்ச்சூர், மண்டியா, யாதகிரி ஆகிய மாவட்டங்களில் தலா 2 பேரும், பெலகாவி, கொப்பல், ஹாவேரி, பாகல்கோடடை, கதக், துமகூருவில் தலா ஒருவரும் கொரோனாவுக்கு பரிதாபமாக பலியாகி உள்ளனர்.

பெங்களூருவில் மட்டும் 63 ஆயிரத்து 33 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதுபோல, பெங்களூருவில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கையும் ஒட்டு மொத்தமாக 1,134 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் நேற்று ஒரே நாளில் 6,777 பேர் குணமடைந்திருப்பதுடன், கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பில் இருந்து மீள்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Next Story