கர்நாடகத்தில் 1½ லட்சத்தை தாண்டியது கொரோனா பாதிப்பு 100 பேர் பலியான பரிதாபம்


கர்நாடகத்தில் 1½ லட்சத்தை தாண்டியது கொரோனா பாதிப்பு 100 பேர் பலியான பரிதாபம்
x
தினத்தந்தி 5 Aug 2020 7:39 PM GMT (Updated: 5 Aug 2020 7:39 PM GMT)

கர்நாடகத்தில் ஒரே நாளில் 5,619 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு 1½ லட்சத்தை தாண்டி உள்ளது. மேலும் நேற்று ஒரேநாளில் கொரோனாவுக்கு 100 பேர் பலியாகி உள்ளனர்.

பெங்களூரு,

கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் பரவுவது தொடர்ந்து அதிகரித்து கொண்டே சென்ற வண்ணம் உள்ளது. முதல்-மந்திரி எடியூரப்பா, மந்திரி சோமசேகர் உள்ளிட்டோர் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பு அதிகரிக்கும், அதே வேளையில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடையும் நபர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது ஆறுதலாக உள்ளது.

இந்த நிலையில், கர்நாடகத்தில் நேற்று முன்தினம் வரை 1 லட்சத்து 45 ஆயிரத்து 830 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகி இருந்தனர். மேலும் நேற்று முன்தினம் வரை கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி 2 ஆயிரத்து 704 பேர் பலியாகி இருந்தனர்.

இந்த நிலையில், கர்நாடகத்தில் நேற்று ஒரே நாளில் கொரோனாவுக்கு 100 பேர் பலியாகி உள்ளனர். கர்நாடகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது;-

5,619 பேருக்கு பாதிப்பு

கர்நாடகத்தில் ஏற்கனவே 1 லட்சத்து 45 ஆயிரத்து 830 பேர் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி இருந்தனர். இந்த நிலையில், இன்று(அதாவது நேற்று) ஒரே நாளில் புதிதாக 5,619 பேர் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். இதன் மூலம் மாநிலத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 51 ஆயிரத்து 449 ஆக உயர்ந்திருக்கிறது. இதுவரை கொரோனா பாதிப்பில் இருந்து 74 ஆயிரத்து 679 பேர் மீண்டுள்ளனர். இதில், நேற்று மட்டும் 5,407 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மாநிலம் முழுவதும் 73 ஆயிரத்து 958 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நேற்று கொரோனா பாதிப்புக்கு உள்ளானவர்களில் பெங்களூரு நகரில் 1,848 பேருக்கும், மைசூருவில் 261 பேருக்கும், கலபுரகியில் 197 பேருக்கும், தார்வாரில் 199 பேருக்கும், பல்லாரியில் 631 பேருக்கும், கொப்பலில் 154 பேருக்கும், தட்சிணகன்னடாவில் 149 பேருக்கும், பாகல்கோட்டையில் 149 பேருக்கும், உடுப்பியில் 173 பேருக்கும், உத்தரகன்னடாவில் 125 பேருக்கும், பெலகாவியில் 293 பேருக்கும், விஜயாப்புராவில் 66 பேருக்கும், துமகூருவில் 31 பேருக்கும், மண்டியாவில் 123 பேருக்கும், ராய்ச்சூரில் 91 பேருக்கும், பீதரில் 52 பேருக்கும், தாவணகெரேயில் 224 பேருக்கும், பெங்களூரு புறநகரில் 110 பேருக்கும், சிக்பள்ளாப்பூரில் 129 பேருக்கும், கோலாரில் 49 பேருக்கும், சிவமொக்காவில் 35 பேருக்கும், குடகில் 13 பேருக்கும், சித்ரதுர்காவில் 24 பேருக்கும், சாம்ராஜ்நகரில் 38 பேருக்கும், ஹாசனில் 137 பேருக்கும், சிக்கமகளூருவில் 48 பேருக்கும், யாதகிரியில் 76 பேருக்கும், ராமநகரில் 45 பேருக்கும், ஹாவேரியில் 71 பேருக்கும், கதக்கில் 78 பேருக்கும் வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது.

100 பேர் பலி

மேலும் கர்நாடகத்தில் நேற்று ஒரே நாளில் 100 பேர் கொரோனா தொற்றுக்கு பலியாகி உள்ளனர். பெங்களூருவில் மட்டும் 29 பேரும், மைசூருவில் 11 பேரும், தட்சிண கன்னடாவில் 10 பேரும், சிவமொக்கா, தாவணகெரேயில் தலா 6 பேரும், கலபுரகி, பெலகாவி, கோலார், துமகூரு ஆகிய மாவட்டங்களில் தலா 4 பேரும், கொப்பல், மண்டியாவில் தலா 3 பேரும், உடுப்பி, ஹாசன், ராய்ச்சூர், யாதகிரி, ஹாவேரி, பீதர் ஆகிய மாவட்டங்களில் தலா 2 பேரும், தார்வார், கதக், சிக்கமகளூரு, குடகில் தலா ஒருவரும் கொரோனாவுக்கு பரிதாபமாக பலியாகி உள்ளனர்.

இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டு இருந்தது.

பெங்களூருவில் மட்டும் 64 ஆயிரத்து 881 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதுபோல, பெங்களூருவில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கையும் ஒட்டு மொத்தமாக 1,163 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story