புதுச்சேரி மாநிலத்தில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 7 பேர் பலி புதிய உச்சமாக 286 பேர் பாதிப்பு


புதுச்சேரி மாநிலத்தில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 7 பேர் பலி புதிய உச்சமாக 286 பேர் பாதிப்பு
x
தினத்தந்தி 5 Aug 2020 8:16 PM GMT (Updated: 5 Aug 2020 8:16 PM GMT)

புதுச்சேரி மாநிலத்தில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 7 பேர் பலியாகி உள்ளனர். புதிய உச்சமாக 286 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

புதுச்சேரி,

புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா தொற்றால் பாதித்தோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் ஆஸ்பத்திரிகளில் படுக்கைகளுக்கு பற்றாக் குறை ஏற்பட்டுள்ளதையடுத்து தொற்று பாதிப்புக்குள்ளானவர்கள் காத்திருப்பில் உள்ளனர். மாநிலத்தில் கடந்த 2-ந் தேதி அதிகபட்சமாக 200 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.

இதை மிஞ்சும் வகையில் நேற்று ஒரே நாளில் புதிய உச்சமாக 286 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து சுகாதாரத்துறை இயக்குனர் மோகன்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

நேற்று முன்தினம் 1,024 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் 286 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் கதிர்காமம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 114 பேர், ஜிப்மரில் 54 பேர், கொரோனா கேர் சென்டரில் 2 பேர், தொற்று அறிகுறிடன் இருப்பவர்கள் 12 பேர், காரைக்காலில் 21 பேர், ஏனாமில் 80 பேர், மாகியில் 3 பேர் சிகிச்சைக்கு பெற்று வருகிறார்கள்.

கதிர்காமம் மருத்துவமனையில் 40 பேர், ஜிப்மரில் 16 பேர், கொரோனா கேர் சென்டரில் 31 பேர், காரைக்காலில் 2 பேர், ஏனாமில் 20 பேர் என மொத்தம் 109 பேர் சிகிச்சை குணமடைந்து நேற்று வீடு திரும்பியுள்ளனர்.

7 பேர் பலி

புதுவை மாநிலத்தில் ஒரே நாளில் மட்டும் 7 பேர் உயிரிழந்து உள்ளனர். கடந்த 28-ந் தேதி கதிர்காமம் அரசு மருத்துவமனையில் சண்முகாபுரத்தைச் சேர்ந்த 77 வயது முதியவர் கொரோனா தொற்றுக் காக சேர்க்கப்பட்டார். கடந்த 30-ந் தேதி முதலியார்பேட்டை இந்திரா நகரைச் சேர்ந்த 62 வயதான மூதாட்டி, வில்லியனூர் வி.மணவெளி திருவேணி நகரைச் சேர்ந்த 74 வயது முதியவர் ஆகியோரும் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு இருந்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்தநிலையில் அவர்கள் 3 பேரும் நேற்று உயிரிழந்தனர்.

ஜிப்மரில் 48 வயது ஆண் நபர், ஏனாமில் 50 வயதான ஆண் நபர்கள் 2 பேர், 80 வயது மூதாட்டி ஒருவர் என மொத்தம் 4 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இவர்களை சேர்த்து பலியானவர்களின் எண்ணிக்கை 65 ஆக உயர்ந்தது.

புதுவை மாநிலத்தில் இதுவரை 43,134 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. 402 பேர்களது பரிசோதனை முடிவுகள் காத்திருப்பில் உள்ளன. ஒட்டுமொத்தமாக 4,432 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களில் 2,646 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். 1,726 பேர் சிகிச்சையில் இருந்து வருகின்றனர்.

இவ்வாறு இயக்குனர் மோகன் குமார் கூறினார்.

Next Story