விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சகோதரி கொரோனாவால் உயிரிழப்பு


விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சகோதரி கொரோனாவால் உயிரிழப்பு
x
தினத்தந்தி 5 Aug 2020 9:21 PM GMT (Updated: 5 Aug 2020 9:21 PM GMT)

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் சகோதரி கொரோனாவால் உயிரிழந்தார்.

சென்னை,

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி.யின் சகோதரி பானுமதி என்கிற வான்மதி (வயது 63) சென்னை கே.கே.நகரில் வசித்து வந்தார். இவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து அவர் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக சிகிச்சை பெற்று வந்தார்.

இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று காலை 7 மணியளவில் அவர் உயிரிழந்தார். அவரது உடலுக்கு திருமாவளவன் அஞ்சலி செலுத்தினார்.

அரியலூரில் உடல் அடக்கம்

சுகாதாரத்துறை வழிகாட்டுதலின்படி வான்மதியின் உடல் சென்னை மந்தைவெளி கல்லறையில் அடக்கம் செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்தநிலையில் அரியலூர் மாவட்டம் அங்கனூரில் வசிக்கும் திருமாவளவனின் தாயார் பெரியம்மாள் தனது மகள் வான்மதியின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த வேண்டும் என்று தனது விருப்பத்தை தெரிவித்தார். இதுதொடர்பாக தமிழக அரசுக்கு திருமாவளவன் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. அவரது கோரிக்கை ஏற்கப்பட்டது. இதையடுத்து வான்மதியின் உடல் அடக்கம் செய்வதற்காக ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் அரியலூர் மாவட்டத்துக்கு எடுத்து செல்லப்பட்டது. அங்கு வான்மதியின் உடலுக்கு இறுதிச்சடங்குகளை திருமாவளவன் செய்தார்.

இரங்கல்

திருமாவளவன் சகோதரி வான்மதி மறைவுக்கு துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, திருநாவுக்கரசர் எம்.பி. ஆகியோர் இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டனர்.

ஒரு வாரம் துக்கம் அனுசரிப்பு

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது;-

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவனின் மூத்த சகோதரி கு.பானுமதி 3 வாரங்களுக்கு முன்பு கொரோனா நோய்த் தொற்றால், தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்ட அவர் உடல்நலம் நன்றாகத் தேறி வந்தார். தானே உணவு உண்ணவும், உடற்பயிற்சிகளைச் செய்யவும் அவரால் இயன்றது. ஒரு சில நாட்களில் மருத்துவமனையிலிருந்து வீட்டுக்கு அனுப்பி விடலாம் என்று மருத்துவர்கள் கூறியிருந்த நிலையில் எதிர்பாராமல் நேரிட்ட மாரடைப்பின் காரணமாக அவர் உயிர் பிரிந்தது.

ஒட்டுமொத்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரிடமும் தனது உடன் பிறந்தவர்களாகவே கருதி பாசம் காட்டிய பானுமதியின் திடீர் மறைவு கட்சிக்கு பேரிழப்பாகும். அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக கட்சியின் கொடிகளை ஒரு வார காலத்துக்கு அரைக்கம்பத்தில் பறக்க விடுமாறும், துக்கம் கடைபிடிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story